முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Bus stop

ஒரு பேருந்து நிறுத்தத்தில் காலியிடமுள்ள பேருந்திற்காய்ப் பல நிமிடம் காத்திருக்கிறேன். பல பேருந்துகளை வேண்டுமென்றே தவறவிடுகிறேன். இப்படி எங்கும் செல்லாமல், வரும் பேருந்துகளிலும் ஏறாமல் நேரம் ஓடுகிறது. இங்கே சில நேரம் நின்றுவிட்டால் ஒரு தொல்லை - இவ்வளவு நேரம் செலவு செய்த பிறகு காலியான பேருந்தில் போகவில்லையானால் காத்திருந்து நேரம் கடத்தியதில் அர்த்தமில்லை, அதனால் கடைசிப் பேருந்தானாலும் கூட்டமிருந்தால் ஏறுவதில்லை. ஒன்றும் பயனின்றி நடந்தே செல்ல முடிவு செய்கிறேன். நேரத்தோடு போகுமிடம் போய்ச்சேரும் நிர்பந்தம் எனக்கில்லை. கூட்டமிகுதியான பேருந்தில் ஏறமாட்டேன் என்ற பிடிவாதமே ஓங்குகிறது. ஒருவேளை பேருந்துகளில் ஏறுவதில்லை என்ற தீர்மானம் முதலிலேயே இருந்திருந்தால் பல நிமிடங்களை நிறுத்தத்தில் விரயம் செய்யாமல் நடக்கத் துவங்கியிருக்கலாம். ஆனால் காலியான பேருந்து ஒன்று வரும் என்கிற நப்பாசை விடுவதில்லை. இப்படி நடந்து போகும்போது ஒரு காலியான பேருந்து என்னைத் தாண்டிச் சென்றால் தப்பான முடிவெடுத்தலுக்கு மனது என்னைக் குற்றம் சொல்லி ஏளனம் செய்கிறது. நேரத்தோடு போகும் நிர்பந்தம் இல்லையானாலும், ஒன்றும் செய்யாமல் நேரவிரயம் செய்வது எனக்குச் சோர்வையே அளிக்கிறது.



அதே வண்டி நிறுத்தத்தில் ஒரு தீர்மானத்துடன் பலர் இருக்கிறார்கள். வரும் முதற் பேருந்தின் ஆட்கூட்டத்தில் அவர்களைத் திணித்துக் கொள்கிறார்கள். பின்னால் ஒரு காலியான பேருந்து வருமோ என்கிற எதிர்பார்ப்போ, வரப்போகும் ஒரு வாய்ப்பைத் தவறவிடும் கவலையோ அவர்களுக்கு இல்லை. போகுமிடத்தை விரைவில் அடைய அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதைப் பிடிக்க முயலாத அவர்களைப் பார்த்து நான் பொறாமைப் படுகிறேன். அவர்களுக்கு எது முக்கியம் என்பதில் அவர்கள் திண்ணமாய் இருக்கிறார்கள்.



இந்த விஷயங்களை மேலிருந்து ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் நேர விரயத்தின் அர்த்தமின்மை நேர உபயோகத்திலும் இருப்பது தெரிகிறது - முக்கியமான மற்றும் முக்கியமல்லாதவை என்று பொதுவில் வகைப்படுத்தப்பட்ட யாவும் மிகச் சிறியதாய், பயனற்றவையாய்த் தோன்றுகிறது. நடப்புகளில் இருந்து விலகி இப்படிக் கற்பனைச் சிறகை விரித்துப் பறந்தால் இப்படியாகத்தான் தோன்றுகிறது.



ஒரு போட்டியில் கலந்து கொள்வதற்கென வந்திருக்கிறேன். போட்டியின் விதிமுறைகள் விசித்திரமானவை: இலக்கு எதுவென்று சொல்லப்படாது; எவ்வளவு நேரத்தில் போய்ச் சேரவேண்டுமென்ற விபரம் இல்லை; எப்படிச் செல்லவேண்டுமென்பதில் கட்டுப்பாடுமில்லை. பயணப் போட்டி என்பது மட்டும் தெரிகிறது. ஒரு பேருந்து நிறுத்தத்தில் காலியிடமுள்ள பேருந்திற்காய்ப் பல நிமிடம் காத்திருக்கிறேன். பல பேருந்துகளை வேண்டுமென்றே தவறவிடுகிறேன்...

கருத்துகள்

இரா. செல்வராசு (R.Selvaraj) இவ்வாறு கூறியுள்ளார்…
வீட்ல சொல்லி ஒரு பொண்ணு பாக்கச் சொல்லீட்டா எல்லாம் சரியாப் போயிடும்:-) :-) அப்புறம் அடிச்சுப் புடிச்சு ஓடுவீங்க இல்ல?
---
வழக்கமான உங்கள் இனிய எழுத்து நடை மிகவும் கவர்கிறது. கிளம்பிய இடத்திலேயே வந்து முடித்திருக்கும் சுழற்சியும் நன்றாக இருக்கிறது.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
செல்வா,

நல்லன விழைதலும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் இன்னும் எழுதுவதற்கு மட்டுமல்லாமல், பொதுவில் வாழ்க்கையிலும் பெரும் நம்பிக்கை பெற உதவுகிறது. சக மனிதரின் அங்கீகாரம் - எந்த வகையினதாய் ஆனாலும் - நம் மேல் நமக்கே மரியாதை வரச் செய்யும் ஒன்று.

தொடர்ந்த ஊக்கத்திற்காய் உங்களுக்கு நன்றி!
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Nalla irukku kannan. Thanks
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
தங்கமணி,

நன்றி!
Ramya Nageswaran இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லா எழுதியிருக்கீங்க கண்ணன்..

//இந்த விஷயங்களை மேலிருந்து ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் நேர விரயத்தின் அர்த்தமின்மை நேர உபயோகத்திலும் இருப்பது தெரிகிறது - முக்கியமான மற்றும் முக்கியமல்லாதவை என்று பொதுவில் வகைப்படுத்தப்பட்ட யாவும் மிகச் சிறியதாய், பயனற்றவையாய்த் தோன்றுகிறது.//

எனக்கு இந்த எண்ணம் வேறு விதத்தில் தோன்றும்: இன்றைக்கு அதிமுக்கியமாக தோன்றும் பல விஷயங்கள் சில வருடங்களில் அர்த்தமற்று போகலாம் என்று...
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
ரம்யா,

நன்றி. நீங்க சொல்றதும் சரிதான்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Good to see this community
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
The take off and landing on the same spot is excellent... Keep this as ur Style...

Continue...

Wishes...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க