முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

"உம்மிணி பலிய ஒன்னு"

Photo by saeed karimi on Unsplash


கல்பெட்டா நாராயணன் பஷீரின் "பால்யகால சகி" பற்றிய உரையின் பகுதியாக பத்துப் பன்னிரண்டு வயதான மஜீத் மற்றும் சுஹராவின் தோழமை எவ்வாறு தொடங்கிற்று என்று சொல்லிக்கொண்டிருந்தார்.


அவர் சொன்ன விதமா, இல்லை பஷீரின் சொல்வித்தையா என்று தெரியவில்லை - கண் கலங்குகிறது, தொண்டை அடைத்துக்கொள்கிறது. 


உயரத்திலிருக்கும் மரக்கொம்பில் மஜீத் ஏறி உட்கார்ந்திருக்கும்போது கீழிருந்து சுஹரா கேட்கிறாள்: "அங்கிருந்து மெக்கா தெரிகிறதா?" 


அவள் உடனிருக்கும்போது அவனுக்கு என்னதான் தெரியாது? அவன் சொல்கிறான்: "மெக்காவும் தெரிகிறது, மதீனாவும் தெரிகிறது!"


வகுப்பில் ஆசிரியர் மஜீதிடம் கேட்கிறார். "ஒன்றும் ஒன்றும் எத்தனை?" 


மஜீத் அறிவுகொண்டு அதை அணுகவில்லை. கற்பனைகொண்டு பதில் சொல்லுகிறான். எத்தனை முறை மழைக்காலத்தில் அதை அவன் பார்த்திருப்பான்? மலையிலிருந்து ஒன்றும் ஒன்றுமாக வழியும் அருவிகள் பெரிய ஒன்றான ஆறாய்ப் பெருகுவதை! அந்த அனுபவம் தந்த கற்பனையில் சொல்லுகிறான்: "ஒன்னும் ஒன்னும் உம்மிணி பலிய ஒன்னு!" (ஒண்ணும்  ஒண்ணும் இத்தன பெரிய ஒண்ணு)


"இதையெல்லாம் சேர்த்து இத்தன பெரிய ஒண்ணா வாங்கிக்கோ" என்று ஆசிரியர் அவன் கையில் ஆறு அடி கொடுத்தார்.


---


வாழ்க்கையின் ஆரம்பங்கள் ரம்மியமாய் இருப்பதன் காரணம் சலனமற்ற வெள்ளை மனதின் இந்தக் கற்பனை தானே? மனதில் மலரும் ஆயிரம் கேள்விகள் ஒவ்வொன்றிற்கும்  ஆயிரம் பதில்களும் இருந்தன. குழந்தைகளுக்கு இன்னும் இருக்கின்றன. அந்த சாத்தியங்களை எல்லாம் வயதும், 'பக்குவமும்' பாழடித்து விடுகின்றன. 'அலகிலா விளையாட்டின்' களிப்பிடமாக இருக்கும் உலகம் சுருங்கிச் சுருங்கி சொற்களை நெருக்கும் அடைசலான அறையாக ஆகிவிடுகின்றது. 


மஜீதும் சுஹராவும் இருக்கும் உலகம் எவ்வளவு விசாலமானது! அங்கே ஒன்றும் ஒன்றும், இன்னும் பலவும் ஒன்றேயாக இருக்கும் சாத்தியம் இன்னுமிருக்கிறது. பஷீரின் இன்னொரு கதையில் கெட்டியோன் குருவி, கெட்டியோள் குருவியைக் கொத்தப்போகிறது. அப்போது ஆட்சேபம் தெரிவிக்கும் பூனையிடம் குஞ்ஞுப்பாத்திமா என்கிற இன்னொரு பத்து வயதுக்காரி அலுத்துக்கொள்ளுகிறாள்: "சொன்னாக் கேக்காது, பாரு". 


மொழி மனிதர்களுக்கே (அதிலும், ஆண்களுக்கே) ஆனது என்று அவள் வயதான பின்னால் தெரிந்து கொள்வாள், ஆனால் அவள் வயதில் குருவிகளும், பூனைகளும், மரங்களும் செடிகளும் மலையாளம் பேசும்.


இதுபோல் பேசும், உயிருள்ள உலகை நினைக்கும்போது, பாரதியையும் நினைத்துக்கொள்கிறேன். அவன் ஒரு துண்டுக்கயிற்றிடம் பேசியவன்.


மனிதர்களிடம் இந்தக் குழந்தை மனது எப்போதும் இருந்தாலும், அது அடக்கிவைக்கப்பட்டிருப்பதால் நமக்குத் தெரிவதில்லை. பாரதியிடம் அது அடக்கப்படாமலேயே இருந்திருக்கவேண்டும்.


"ஒரு மூங்கிற் கழியிலே கொஞ்சம் மிச்சக்கயிறு

தொங்குகிறது.

ஒரு சாண்கயிறு.

இந்தக் கயிறு, ஒருநாள் சுகமாக ஊசலாடிக் கொண்டிருந்தது.

பார்த்தால் துளிகூடக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.

சில சமயங்களில் அசையாமல் ‘உம்’ மென்றிருக்கும்.

கூப்பிட்டாற்கூட ஏனென்று கேட்காது.

இன்று அப்படியில்லை. ‘குஷால்’ வழியிலிருந்தது.

எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் சிநேகம். நாங்கள்

அடிக்கடி வார்த்தைசொல்லிக்கொள்வதுண்டு.

“கயிற்றினிடத்தில் பேசினால், அது மறுமொழி சொல்லுமா?”

பேசிப்பார், மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை." 


இவையெல்லாம்  'உம்மிணி பலிய ஒன்னு' என்ற பெரிய ஒன்றான உலகத்தின் நிதர்சனங்கள். 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

முதிய பெண்டிர் முன்னொருகாலத்தில் கண்டங்களாக இருந்தார்கள்

  டுவிட்டரில் கண்ணில் படும் பல குப்பைகள் ஏன் எனக்குப் பரிந்துரைக்கப் படுகின்றன என்று புரிவதில்லை. ஆனாலும் அப்படி யதேச்சையாகக் கண்ணில் பட்ட பதிவொன்று என்னை எங்கோ (பழையொரு மகிழ்ச்சியான இளமைக்காலத்துக்குக்) கூட்டிச்சென்றுவிட்டது.  இதிலே மூத்தோருக்கான ஏதோ மூளைப் பயிற்சி. இதன் முடிவில் இந்த அழகியின் முகத்தில்   வெட்கம் கலந்த பெருமிதம்! உலகின் எல்லாப் பகுதிகளிலும் வயது மூக்க, பெண்கள் ஒரேபோல ஆகிவிடுகிறார்கள்! இவள் என் பாட்டியேதான். Ejercicio cerebral para las personas mayores. pic.twitter.com/wEMLDTjti0 — Informa Cosmos (@InformaCosmos) April 25, 2025 இதைப் பார்த்ததும்தான் சச்சியின் கவிதை நினைவுக்கு வந்தது. இதன் மலையாள வடிவை இன்னும் படித்ததில்லை. கவிஞரே ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த கவிதை இது. இதை மீண்டும் படித்தபோது மொழிமாற்றத் தோன்றியதால் இந்தப் பதிவு. மூதாட்டிகள்      - கே.சச்சிதானந்தன் (ஆங்கிலம் - மலையாளத்திலிருந்து கவிஞரே மொழிபெயர்த்தது) மூதாட்டிகள் மந்திரக் கோல்களில் பறப்பதில்லை   அநிச்சயமான காடுகளில் இருந்து  தெளிவற்ற குறிகளும் சொல்வதில்...

பிரதியாகிய நானும், வாசகியாகிய நீயும்

  சிட் கார்மனின் "It isn't for want" என்ற கவிதை  படித்ததும் மொழிபெயர்க்கத் தூண்டியது.  ஆங்கிலக்கவிதை இங்கே . Photo by Magesh Babu என் மொழிபெயர்ப்பு: எதையும் பேசவோ  உன்னிடம் சொல்லவோ   உனக்கு அறியத்தரவோ  வேண்டும் என்பதனாலல்ல - போக முடியாதபடி    உன்னை நிறுத்தி வைக்கவே -   இங்கு நான் நானாகிறேன்  நீ இருக்கும் வரை - நீ இருக்கும் வரை --- கவியின் / கவிதையின் (இப்படியான) வாசிப்பவருடனான நேரடி உரையாடல் அரிதானது.  ஆங்கிலப் பிரதியில் பலமுறை தோன்றும்  you   தமிழின் வேற்றுமை உருபுகளால் வெவ்வேறு வடிவங்களைக் கொள்கின்றது. ஆனால் அது அவ்வாறு வருவது ஒரு மந்திர உச்சாடனை போல கவிதையின் ஒலியமைப்புக்கு அழகு சேர்க்கிறது. இவ்வளவு ' நீ ' இருக்குமிடத்தில் ' நான் ' ஆங்கிலத்தில் மறைந்தேயிருக்கிறது. தமிழில் 'நான்' இல்லாமல் மொழிபெயர்க்க முடியுமானாலும் அந்த வரி தட்டையாகவே அமையும்.  நான் இங்கே முக்கியமல்ல - நீயே இங்கு நிறைந்திருக்கிறாய். உன்னைச் சுற்றியே எல்லா இயக்கமும்.  'நான்' பிரதி / கவி என்பது ஒரு வாசிப்பு. ஆனால் எவ்வளவு சாத்தியங்களை உள...

வைக்கம் முகம்மது பஷீரும் மீசை மாமாவும்...

  மேட்டுப்பாளையம் ரோட்டில் ஓடிக்கொண்டிருந்த ’ஜீப்’சட்டென்று நிதானமிழந்து, ஒரு குலுங்கல் குலுங்கி, சறுக்கி, ஒருவழியாக சாலையோரத்தில் நின்றது - பங்க்சர். மாமாவின் சாம்பல் சொம்புக்குள்ளே பத்திரமாகவே இருந்தது. மின்சார உலையில் மாமாவை அன்றைக்குக் காலையில்தான் எரியூட்டியது. ஒருமணிநேரத்தில் ஒருபிடி சாம்பல் - மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் அதைக்கலக்கவே இந்தப் பயணம். ’நிமித்தங்களை’ நம்புகிறவர் சித்தப்பா - “இது மாதிரி சமயங்களில் இப்படி ஏதாவது நிமித்தங்கள் காட்டும்” என்றார். மாற்றுச்சக்கரத்தைப் பொருத்தி எல்லோரும் இளநீர் குடித்தோம். திக்காலுக்கொன்றாய் சிதறிக்கிடக்கும் மாமாவின் அக்காள் / தங்கைகளின் மக்கள் நாங்கள். மாமா பிள்ளைகளுடன் சேர்த்தால் ஏறக்குறைய 22 பேர் கொண்ட இரண்டு கிரிக்கெட் அணியினர் தேறுவோம். மாமா யாரையும் விட்டுக்கொடுக்காதவர். எல்லோரும் எல்லாருடனும் எப்போதும் தொடர்பிலிருக்கவேண்டும் என்று விழைபவர். எனக்கும் அந்த விழைவு உண்டு. இந்த 22 பேரும் ஒன்றாய்க் கூடி மகிழவேண்டும் என்று அடிக்கடி திட்டமிடுதலும், எல்லோரும் இயைந்து ஒன்றாய்ச்சேர சமயம் கைகூடுவதில்லையாதலால் அதைக் கைவிடுவதுமாய் இருப்போம். இ...