டுவிட்டரில் கண்ணில் படும் பல குப்பைகள் ஏன் எனக்குப் பரிந்துரைக்கப் படுகின்றன என்று புரிவதில்லை. ஆனாலும் அப்படி யதேச்சையாகக் கண்ணில் பட்ட பதிவொன்று என்னை எங்கோ (பழையொரு மகிழ்ச்சியான இளமைக்காலத்துக்குக்) கூட்டிச்சென்றுவிட்டது.
இதிலே மூத்தோருக்கான ஏதோ மூளைப் பயிற்சி. இதன் முடிவில் இந்த அழகியின் முகத்தில் வெட்கம் கலந்த பெருமிதம்! உலகின் எல்லாப் பகுதிகளிலும் வயது மூக்க, பெண்கள் ஒரேபோல ஆகிவிடுகிறார்கள்! இவள் என் பாட்டியேதான்.
Ejercicio cerebral para las personas mayores.
— Informa Cosmos (@InformaCosmos) April 25, 2025
pic.twitter.com/wEMLDTjti0
இதைப் பார்த்ததும்தான் சச்சியின் கவிதை நினைவுக்கு வந்தது. இதன் மலையாள வடிவை இன்னும் படித்ததில்லை. கவிஞரே ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த கவிதை இது. இதை மீண்டும் படித்தபோது மொழிமாற்றத் தோன்றியதால் இந்தப் பதிவு.
மூதாட்டிகள்
- கே.சச்சிதானந்தன் (ஆங்கிலம் - மலையாளத்திலிருந்து கவிஞரே மொழிபெயர்த்தது)
மூதாட்டிகள் மந்திரக் கோல்களில் பறப்பதில்லை
அநிச்சயமான காடுகளில் இருந்து
தெளிவற்ற குறிகளும் சொல்வதில்லை.
அவர்கள் அமைதியான சாயங்காலங்களில்
பூங்காவின் காலியான பெஞ்சுகளில்
சும்மா உட்க்கார்ந்து
புறாக்களை அவைகளின் பேர்சொல்லி அழைத்து
அவைகளுக்குத் தானியங்களை இட்டுக் கொண்டிருப்பார்கள்.
அல்லது, அலைகள்போல மெல்லே நடுங்கியபடி
அவர்கள் அரசு மருத்துவமனைகளின்
முடிவற்ற வரிசையில் நின்றிருப்பார்கள்
இல்லை வெளியூர் சென்று
எப்போதோ மரித்துவிட்ட
மகன்களின் கடுதாசை எதிர்பார்த்து
தபால் நிலையங்களில்
தூய மேகக் கூட்டம்போல நிலைகொள்வார்கள்.
அவர்கள் மேலே தூக்கிப்போட்ட ஏதோவொன்று
பூமிக்குத் திரும்பி வராதது போன்ற
தொலைந்த பார்வையுடன்
தூறல் போல கிசுகிசுத்தபடி
வீதியில் அலைவார்கள்.
கடை விறாந்தைகளில்
கனவற்ற உறக்கத்தில் அவர்கள்
டிசம்பர் இரவுகளைப் போல விறைத்திருப்பார்கள்.
பார்வை மங்கும் அவர்கள் கண்களில்
இன்னும் ஊஞ்சல்கள் ஆடிக்கொண்டிருக்கின்றன,
அவர்களின் மழுங்கும் ஞாபகத்தில் இன்னும்
அல்லிகளும் கிறிஸ்துமசுகளும் இருக்கின்றன.
அவர்களின் ஒவ்வொரு தோல்ச் சுருக்கமும்
ஒரு நாட்டுப்புறக் கதை சொல்லும்.
தொங்கிச் சுருங்கிய அவர்களின்
மார்புகளில் அவர்களை பொருட்படுத்தாத
இன்னும் மூன்று தலைமுறைகளுக்குச் சேர்த்தும்
தேவையான பாலுண்டு.
எல்லா அந்திகளும் அவர்களை
இருட்டில் இருத்திக் கடந்து செல்லும்.
இறப்புக்கு அஞ்சுவதில்லை அவர்கள்
எப்போதோ இறந்துவிட்டார்கள்.
முதிய பெண்டிர் முன்னொருகாலத்தில்
கண்டங்களாக இருந்தார்கள்.
அவர்களுள் அடர்காடுகள் இருந்தன
ஏரிகளும், மலைத்தொடர்களும், எரிமலைகளும்,
இன்னும், ஆத்திரத்தின் உட்கடல்களும்கூட இருந்தன.
புவிவெப்பத்தில் அவை உருகிச் சுருங்கி
வெறும் வரைபடங்களாகிவிட்டன.
அப்படங்களை நீங்கள் மடித்துக்
கைவசம் வைத்துக்கொள்ளலாம்
யாரறிவார், என்றாவது நீங்கள் உங்கள் வீடுசேர
வழிகாட்ட அவை உங்களுக்கு உதவலாம்.
கருத்துகள்