முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதிய பெண்டிர் முன்னொருகாலத்தில் கண்டங்களாக இருந்தார்கள்

 டுவிட்டரில் கண்ணில் படும் பல குப்பைகள் ஏன் எனக்குப் பரிந்துரைக்கப் படுகின்றன என்று புரிவதில்லை. ஆனாலும் அப்படி யதேச்சையாகக் கண்ணில் பட்ட பதிவொன்று என்னை எங்கோ (பழையொரு மகிழ்ச்சியான இளமைக்காலத்துக்குக்) கூட்டிச்சென்றுவிட்டது. 


இதிலே மூத்தோருக்கான ஏதோ மூளைப் பயிற்சி. இதன் முடிவில் இந்த அழகியின் முகத்தில்   வெட்கம் கலந்த பெருமிதம்! உலகின் எல்லாப் பகுதிகளிலும் வயது மூக்க, பெண்கள் ஒரேபோல ஆகிவிடுகிறார்கள்! இவள் என் பாட்டியேதான்.

இதைப் பார்த்ததும்தான் சச்சியின் கவிதை நினைவுக்கு வந்தது. இதன் மலையாள வடிவை இன்னும் படித்ததில்லை. கவிஞரே ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த கவிதை இது. இதை மீண்டும் படித்தபோது மொழிமாற்றத் தோன்றியதால் இந்தப் பதிவு.


மூதாட்டிகள் 

    - கே.சச்சிதானந்தன் (ஆங்கிலம் - மலையாளத்திலிருந்து கவிஞரே மொழிபெயர்த்தது)


மூதாட்டிகள் மந்திரக் கோல்களில் பறப்பதில்லை  

அநிச்சயமான காடுகளில் இருந்து 

தெளிவற்ற குறிகளும் சொல்வதில்லை.


அவர்கள் அமைதியான சாயங்காலங்களில் 

பூங்காவின் காலியான பெஞ்சுகளில் 

சும்மா உட்க்கார்ந்து 

புறாக்களை அவைகளின் பேர்சொல்லி அழைத்து 

அவைகளுக்குத் தானியங்களை இட்டுக் கொண்டிருப்பார்கள்.


அல்லது, அலைகள்போல மெல்லே நடுங்கியபடி 

அவர்கள் அரசு மருத்துவமனைகளின் 

முடிவற்ற வரிசையில் நின்றிருப்பார்கள்

இல்லை வெளியூர் சென்று 

எப்போதோ மரித்துவிட்ட

மகன்களின்  கடுதாசை எதிர்பார்த்து 

தபால் நிலையங்களில் 

தூய மேகக் கூட்டம்போல நிலைகொள்வார்கள்.

 

அவர்கள் மேலே தூக்கிப்போட்ட ஏதோவொன்று 

பூமிக்குத் திரும்பி வராதது போன்ற 

தொலைந்த பார்வையுடன் 

தூறல் போல கிசுகிசுத்தபடி 

வீதியில் அலைவார்கள்.


கடை விறாந்தைகளில் 

கனவற்ற உறக்கத்தில் அவர்கள் 

டிசம்பர் இரவுகளைப்  போல விறைத்திருப்பார்கள்.


பார்வை மங்கும் அவர்கள் கண்களில் 

இன்னும் ஊஞ்சல்கள் ஆடிக்கொண்டிருக்கின்றன,

அவர்களின் மழுங்கும்  ஞாபகத்தில் இன்னும் 

அல்லிகளும் கிறிஸ்துமசுகளும்  இருக்கின்றன.


அவர்களின் ஒவ்வொரு தோல்ச் சுருக்கமும் 

ஒரு நாட்டுப்புறக் கதை சொல்லும்.

தொங்கிச் சுருங்கிய அவர்களின் 

மார்புகளில் அவர்களை பொருட்படுத்தாத 

இன்னும் மூன்று தலைமுறைகளுக்குச் சேர்த்தும்  

தேவையான பாலுண்டு.  


எல்லா அந்திகளும் அவர்களை 

இருட்டில் இருத்திக் கடந்து செல்லும்.

இறப்புக்கு அஞ்சுவதில்லை அவர்கள்

எப்போதோ இறந்துவிட்டார்கள்.


முதிய பெண்டிர்  முன்னொருகாலத்தில் 

கண்டங்களாக இருந்தார்கள்.

அவர்களுள் அடர்காடுகள் இருந்தன

ஏரிகளும், மலைத்தொடர்களும், எரிமலைகளும், 

இன்னும், ஆத்திரத்தின் உட்கடல்களும்கூட இருந்தன.

புவிவெப்பத்தில் அவை உருகிச் சுருங்கி 

வெறும் வரைபடங்களாகிவிட்டன.

அப்படங்களை நீங்கள் மடித்துக் 

கைவசம் வைத்துக்கொள்ளலாம் 

யாரறிவார், என்றாவது நீங்கள் உங்கள் வீடுசேர 

வழிகாட்ட  அவை உங்களுக்கு உதவலாம்.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...

பகற்கனவு

அலுவலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பொழுது உணவு இடைவேளைக்குப் பின் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ட்ரீம் அடிக்கும் அந்த 30 நிமிடங்கள் தான். இதற்கப்புறம் ஒரு 10 நிமிடக் கோழித்தூக்கம் நிச்சயம் உண்டு. அலுவலக நேரத்தில் தூங்கியதால் ஊழியரை விட்டுக்கு அனுப்பின சம்பவத்திற்குப் பிறகுமா? என்று வாய் பிளக்காதீர்கள். சீனாவில் எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒரு 6 மாதம் வேலை பார்த்தேன். காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். 11:45 க்கு மதிய உணவு. அப்புறம் கட்கத்தில் ஒரு பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டு டூத் பிக்கினால் பல்லை நோண்டிக்கொண்டே இடத்திற்கு வந்து, இருக்கையை நகர்த்திப் போட்டு "joining kit" உடன் வருவதாக நான் சந்தேகப்படும் லேசான மெத்தையை விரிப்பது. ஷூவைக் கழற்றி ஒரு ஓரமாகப் போட்டு, கொஞ்ச நேரம் பேப்பரை மேய்வது. அப்புறம் லைட்டை எல்லாம் அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆனந்த சயனம். 2 மணிக்குத் தான் மறுபடி லைட் போடுவார்கள். ஒரு முறை 1 மணியளவில் உணவு முடிந்து அலுவலகம் வந்த போது, இருட்டான காரிடாரில் சுவற்றைத் தேய்த்துக் கொண்டே நடக்க வேண்டிவந்தது. இப்படி சுகமாக, இவ்வளவு ந...