முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குடைத்தாத்தாவின் கொடை

குடைத்தாத்தா என்று நாங்கள் (வீட்டின் சிறுவர்பட்டாளம்) பெயர் சூட்டிய மனிதர் ஒருநாள் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். கோவை, மதுரை என்று ஊர் சுற்றும் 'பஞ்சு ஏஜென்ட்' வேலை என்றார். நான் அவரைப் பார்க்கும்போது அவருக்கு வயது அறுபது இருந்திருக்கும் - எனக்குப் பதிமூன்று. திருமணம் செய்துகொள்ளவில்லை என்று தெரிந்து கொண்டேன். பழைய குடும்ப நண்பர் - மாதமொருமுறை கோவை வந்தால் எங்கள் வீட்டில் தங்கிக் கொள்வார். கையில் எப்போதும் ஒரு குடையும் நைந்துபோகும் நிலையிலிருக்கும் பையும் வைத்திருப்பார். பைக்குள் பல காகிதப் பொதிகள் வைத்திருப்பார். ஒரு பொதிக்குள் (பொதிக்குள் பொதியில்) நோட்டும் சில்லறையுமாக காசு வைத்திருப்பார். தங்குமிடம் மற்றும் உணவுக்காக அவ்வப்போது காசோ பொருளோ வீட்டிலே கொடுத்துவிடுவார்.

இவர் இசைப்பித்து பிடித்தவர். பல கலைஞர்களை எனக்கு அறிமுகம் செய்தவர். இசைக்கலைஞர்கள் பற்றிய சுவையான நிகழ்ச்சிகளைக் கூறூவார். நேரிலோ, ஒலிநாடாவிலோ கேட்கும் இசையில் இருந்திருந்தவாறு மூழ்கி விடுவார். அடிக்கடி கண்ணீர் விட்டு அழுவார் - உடல் சிறிதாகக் குலுங்கி அடங்கும். பேச்சுக்கொடுத்தால் அடுத்தநொடியில் இயல்பாகி விடுவார். வீட்டில் இது குறித்த எள்ளல் இருந்தாலும் "பாவம், நல்ல பாட்டு கேட்டால் கரைஞ்சுடும்" என்ற புரிதலும் இருக்கும்.

எனக்கு இது குறித்து வியப்புதான். எப்படி இசைக்குக் கண்ணீர் உகுக்கமுடியும்? அவ்வளவு தீவிர இலயிப்புக்குப் பின் சட்டென்று இயல்பு நிலைக்கு எப்படி வர முடியும்? இந்தக் குறுகுறுப்பே என்னைக் கருநாடக இசையை அணுகச் செய்தது. இவர் சொல்லும் வேடிக்கைக் கதைகளைக் கேட்டு சிலர் பாட்டைக் கேட்கவாரம்பித்தேன். மதுரை மணி, எம்.டி. ராமநாதன், செம்பை, செம்மங்குடி, பட்டம்மாள், ஜெயராமன், என்று விளையாட்டாய் ஆரம்பித்தது எனக்கும் பித்தாக ஆகிவிட்டது. கோவையில் நடக்கும் சொற்ப கச்சேரிகளுக்குப் போகவாரம்பித்தேன். எந்த ஒரு இசைத்துணுக்கைக் கேட்கநேர்ந்தாலும் உடனே என்னிடம் "என்ன இராகம்" என்பார். சொல்லுவேன்; சரியானால் பாராட்டுவார்; தவறாயிருந்தால் சொல்லிக்கொடுப்பார். இசை என்னை உள்ளிழுத்துக்கொண்டது; ஆட்கொண்டது; பித்துப்பிடிக்கச் செய்தது.

நான் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவன். இசை பல இரசாயனங்களை எனக்குள் உற்பத்தி செய்வதாக எனக்குத் தோன்றியது. இன்னதென்று சொல்லமுடியாத, தன்வயமிழக்கவைக்கும் ஒரு போதை; பல வகை உணர்ச்சிக் கொந்தளிப்புகள் என்று இசை படுத்தியது. ஒரு சில  தருணங்களில் நானும் என்னையறியாமல் கண்ணீர் விடத் துவங்கினேன். குடைத்தாத்தா போல குலுங்கியழாவிட்டாலும் சில தருணங்களில் வாய்விட்டழுதுவிடுவேன் - அப்படியொரு சுகமான வேதனை மனநிலை அது.

இசை கேட்கும்போது குடைத்தாத்தா எப்படிப்பட்ட கட்டங்களில் குலுங்குவார் என்று முன்கூட்டியே ஊகிப்பேன். நான் பாடி அவரை அந்நிலைக்குத்தள்ள வேண்டும் என்ற ஆசையும் நிறைவேறியது. "வசந்தமுல்லை போலே வந்து" பாட்டை சிறுவயதில் நன்றாகவே பாடிக்கொண்டிருந்தேன். "மந்திரக்கண்ணாலே தந்திரவலைவீசும்" என்று பாடியபோது தாத்தா கண்ணீர் விட்டார். எனக்கு மிக நிறைவாக இருந்தது.

குடைத்தாத்தாவைப் போலல்லாமல்  பலர் மத்தியில் என்வயமிழக்காமல் இருப்பதில் கவனமாக இருப்பேன். தாத்தாவின் இறுதிக்காலத்தில் மாமா சிலகாலம் அவரை வைத்துப் பார்த்துக் கொண்டார். அப்புறம் வேறு வழியில்லாமல் அவரை அவர் உறவினர்களிடம் அனுப்பிவைத்தோம். அதற்கப்புறம் விரைவிலேயே அவர் இறந்த செய்தி வந்தது.

இசைப்பதை விட இசையை கேட்டு அதில் ஆழ்ந்து அமிழ்ந்து இல்லாமல் போய்விட முடிவது பெரும் பேறு. இதை எனக்கு உணர்த்திய குடைத்தாத்தா எனக்குத் தந்தது பெருங்கொடை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...