முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இளையராஜாவின் மரி மரி நின்னே, டி எம் கிருஷ்ணா

இளையராஜா தியாகராஜரின் ‘மரி மரி நின்னே' பாடலை இராகம் மாற்றியமைத்ததைப் பற்றி டி எம் கிருஷ்ணா தமது புத்தகத்தில் எழுதியிருப்பதைக் குறித்து மேலும் அண்மைய செவ்வி ஒன்றில் கருத்து தெரிவித்தார். அதை இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளும் முயற்சியில் இந்தப் பதிவு.

 

செவிவழியாகப் பலபத்தாண்டுகள் கற்பிக்கப்பட்டு வரும் இசைப்பாடல் (அ) Composition (இது இராகம்-தாளம்-பிரதி என்ற முக்கோணத்தில் அடங்குவது) ஒரு குறிப்பிட்ட அழகியல் சட்டகத்தில் பொருந்தி வருவதாகவும், இம்மாதிரியான இராக மாற்றங்கள் அந்த அழகியலைக் குலைத்து விடுவதால் அவற்றைத் தன்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை என்றும் கிருஷ்ணா சொன்னார். 

எந்த அழகியல் அம்சங்களை கிருஷ்ணா குறிப்பிடுகிறார் என்று யோசித்துப்பார்த்ததில் கீழ்க்கண்டவை தோன்றின. அவையாவன - எனக்குத் தோன்றிய வரிசையில்:

  1. ‘ஸ்வராக்‌ஷரப்' பிரயோகங்கள் தியாகராஜர் தொடங்கிய பழைய வாக்கேயக்காரர்களின் படைப்புகளில் காணக்கிடைக்கின்றன. அதாவது பாடலின் சொற்களில் ஸ்வரங்கள் தோன்றும்போது அவற்றை அந்த ஸ்வரங்களாகவே பாடுதல் / இசைத்தல். இவற்றை மறுவாக்கம் செய்யும்போது இந்தவிடங்களைத் தவறவிட வாய்ப்பு இருக்கிறது. எடுத்துக்காட்டு - தியாகராஜரின் ‘ஸாமஜவர கமனா' என்ற இந்தோளராகப் பாடலின் அனுபல்லவியில் வரும் “ஸா ம நி க ம ஜஸுதாமய” என்று துவங்கும் இடம்.
  2. சில இராகங்களில் அந்நிய ஸ்வரங்கள் அமைந்திருக்கும். எடுத்துக்காட்டாக ஆனந்த பைரவியில் வரும் அந்தர காந்தாரம். சியாமா சாஸ்திரி தன் ‘மரிவேறே' என்ற பாடலில் இந்த அந்நியஸ்வரம் வரும் பகுதியில் ‘நின்னு மரிமற வகனே’ என்ற வரியை வைத்திருப்பார். இறையை நோக்கி "உன்னை மறவேன்” என்று பாடுமுகமாக இருந்தாலும், இந்த அந்தர காந்தாரம் வரும்படியாக இசையை இங்கே அமைத்ததில் இந்த ஸ்வரத்தை மறக்கவில்லை என்னும்படியாகவும் கொள்ளலாம் என்று இந்தப்பாடலைக் குறித்துச் சிலாகிப்பார்கள். உண்மையிலேயே இதை இயற்றியவர் இப்படி யோசித்துச் செய்தாரா இல்லை அது இப்படியாகவும் புரிந்துகொள்ளப்பட்டதா என்று சொல்லமுடியவில்லை. ஆனால் அந்தப் பாடலின் அழகியல் அம்சமாக இது நிலைத்துவிட்டது.
  3. ஒரு பாடலை இயற்றும்போது அதை எந்த இராகத்தில் அமைப்பது என்று எப்படி முடிவு செய்கிறார்கள்? முத்துஸ்வாமி தீக்‌ஷிதர் தம் பாடல்களில் இராகத்தின் பெயரைத் திறமையாகச் சேர்க்கும் வல்லமை பெற்றவர். அது அந்த பாடலின் பாடுபொருளோடு இயைந்ததாக இருக்கும். ‘ஆனந்த நடனப் பிரகாசம்' என்ற சிதம்பரம் குறித்த பாடலில் ‘ஶ்ரீ கேதாராதி’ என்ற வரியில் இப்பாடலின் இராகத்தைச் சேர்ப்பதுடன் பாடலின் பொருளில் சிவனை கேதாரம் முதலான தலங்களில் திகழ்பவன் என்னும்படியாகப் பாடியிருப்பார். மேலும் தியாகராஜரின் ‘எந்தரோ மஹானுபாவுலு’ என்ற பாடல் இராமாயணத்தின் சுந்தரகாண்டத்தில் ஶ்ரீ (லட்சுமி) வடிவமான சீதை அனுமனிடம் சொன்னதையே முதல் வரியாகக் கொண்டதால் ஶ்ரீ இராகத்திலேயே அமைத்தார் என்றும் சொல்லுவார்கள்.
  4. அப்புறம் பாடலின் பொருளுக்குத் தகுந்தாற்போல மென்மையாகவோ வலுவாகவோ பாடுவது போன்ற சிலவற்றையும் கேள்விப்பட்டிருக்கிறேன். தியாகராஜரின் நாட்டை இராகப் பாடலான ஜகதானந்தகாரகா என்ற பாடலில் ஆகாயத்தைக் குறிக்கும் சொல்லான ‘ககனம்’ வரும் இடமான  ‘ககனாதிப சத்குலஜ’ என்பதை மேல் ஸ்தாயி ஸ்வரங்கள் கொண்டு அமைத்திருப்பார் என்பது ஒரு எடுத்துக்காட்டு. இதுவும் ஒரு interpretation ஆக இருக்கும் வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் இவையும் பாடலின் அழகியல் அம்சங்கள் ஆகின்றன.

மேலுள்ளவற்றையே கிருஷ்ணா குறிப்பிட்டாரா? அப்படியானால் அவர் கருத்தின் நியாயம் புலப்படுகிறது. இந்த அம்சங்கள் குலையாமல் இப்பாடல்களை மறுவாக்கம் செய்வது முடியாததில்லையானாலும் எளிமையானதல்ல.

ஆனாலும் இளையராஜா ஒரு பழம்பாடலை மறுவாக்கம் செய்வது அவர் படைப்பூக்கத்தினால் நிகழ்வது. எனக்கு சிந்துபைரவி திரைப்படத்தில் வந்த மரி மரி நின்னே பிடித்தே இருந்தது. "Fan fiction" என்பது போல், "விசிறிகள்" தம் ஆதர்சப் படைப்பாளிகளின் படைப்புகள் போலவே படைப்பது எங்கும் காணக்கிடைக்கிறது. இளையராஜாவின் இந்த முயற்சி குறைந்த பட்சம் அம்மாதிரியே எனக்குப்பட்டது. 

ஒரு கருநாடக இசைப்பாடல் எந்தவிதமான அழகியலைக் கட்டமைக்கிறது? படைப்பு உண்மையில் நிகழ்கிறதா?  அதைக்கேட்பவர்கள் எதை இரசிக்கிறார்கள்? என்று எல்லாவற்றையும் கட்டுடைக்கும் கிருஷ்ணாவுக்கு இளையராஜாவின் இந்த மறுவாக்கம் ஆட்சேபத்திற்குரியதாக இருக்க வாய்ப்பில்லை என்றே நினைத்திருந்தேன்.  அவர் கேள்விக்குட்படுத்தும் அழகியல் அம்சங்களே (எடுத்துக்காட்டாக பக்தி தொடர்பானவை - மேற்சொன்னவையே காரணங்களாக இருக்கும் பட்சத்தில் ) குலைக்கப்படுவதற்காக அவர் இதை ஒப்புக்கொள்ளாதது வியப்பாக இருந்தது.

ஆனால் கிருஷ்ணா எந்தக் கருத்தையும் கொண்டிருப்பதும், அதைச் சொல்லுவதும் அவர் விருப்பம், சுதந்திரம். இந்தக் கருத்தினால் அவரைக் குறித்த என் மதிப்பும் அவர் மேலுள்ள மரியாதையும் மாறாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...