முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இளையராஜாவின் மரி மரி நின்னே, டி எம் கிருஷ்ணா

இளையராஜா தியாகராஜரின் ‘மரி மரி நின்னே' பாடலை இராகம் மாற்றியமைத்ததைப் பற்றி டி எம் கிருஷ்ணா தமது புத்தகத்தில் எழுதியிருப்பதைக் குறித்து மேலும் அண்மைய செவ்வி ஒன்றில் கருத்து தெரிவித்தார். அதை இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளும் முயற்சியில் இந்தப் பதிவு.

 

செவிவழியாகப் பலபத்தாண்டுகள் கற்பிக்கப்பட்டு வரும் இசைப்பாடல் (அ) Composition (இது இராகம்-தாளம்-பிரதி என்ற முக்கோணத்தில் அடங்குவது) ஒரு குறிப்பிட்ட அழகியல் சட்டகத்தில் பொருந்தி வருவதாகவும், இம்மாதிரியான இராக மாற்றங்கள் அந்த அழகியலைக் குலைத்து விடுவதால் அவற்றைத் தன்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை என்றும் கிருஷ்ணா சொன்னார். 

எந்த அழகியல் அம்சங்களை கிருஷ்ணா குறிப்பிடுகிறார் என்று யோசித்துப்பார்த்ததில் கீழ்க்கண்டவை தோன்றின. அவையாவன - எனக்குத் தோன்றிய வரிசையில்:

  1. ‘ஸ்வராக்‌ஷரப்' பிரயோகங்கள் தியாகராஜர் தொடங்கிய பழைய வாக்கேயக்காரர்களின் படைப்புகளில் காணக்கிடைக்கின்றன. அதாவது பாடலின் சொற்களில் ஸ்வரங்கள் தோன்றும்போது அவற்றை அந்த ஸ்வரங்களாகவே பாடுதல் / இசைத்தல். இவற்றை மறுவாக்கம் செய்யும்போது இந்தவிடங்களைத் தவறவிட வாய்ப்பு இருக்கிறது. எடுத்துக்காட்டு - தியாகராஜரின் ‘ஸாமஜவர கமனா' என்ற இந்தோளராகப் பாடலின் அனுபல்லவியில் வரும் “ஸா ம நி க ம ஜஸுதாமய” என்று துவங்கும் இடம்.
  2. சில இராகங்களில் அந்நிய ஸ்வரங்கள் அமைந்திருக்கும். எடுத்துக்காட்டாக ஆனந்த பைரவியில் வரும் அந்தர காந்தாரம். சியாமா சாஸ்திரி தன் ‘மரிவேறே' என்ற பாடலில் இந்த அந்நியஸ்வரம் வரும் பகுதியில் ‘நின்னு மரிமற வகனே’ என்ற வரியை வைத்திருப்பார். இறையை நோக்கி "உன்னை மறவேன்” என்று பாடுமுகமாக இருந்தாலும், இந்த அந்தர காந்தாரம் வரும்படியாக இசையை இங்கே அமைத்ததில் இந்த ஸ்வரத்தை மறக்கவில்லை என்னும்படியாகவும் கொள்ளலாம் என்று இந்தப்பாடலைக் குறித்துச் சிலாகிப்பார்கள். உண்மையிலேயே இதை இயற்றியவர் இப்படி யோசித்துச் செய்தாரா இல்லை அது இப்படியாகவும் புரிந்துகொள்ளப்பட்டதா என்று சொல்லமுடியவில்லை. ஆனால் அந்தப் பாடலின் அழகியல் அம்சமாக இது நிலைத்துவிட்டது.
  3. ஒரு பாடலை இயற்றும்போது அதை எந்த இராகத்தில் அமைப்பது என்று எப்படி முடிவு செய்கிறார்கள்? முத்துஸ்வாமி தீக்‌ஷிதர் தம் பாடல்களில் இராகத்தின் பெயரைத் திறமையாகச் சேர்க்கும் வல்லமை பெற்றவர். அது அந்த பாடலின் பாடுபொருளோடு இயைந்ததாக இருக்கும். ‘ஆனந்த நடனப் பிரகாசம்' என்ற சிதம்பரம் குறித்த பாடலில் ‘ஶ்ரீ கேதாராதி’ என்ற வரியில் இப்பாடலின் இராகத்தைச் சேர்ப்பதுடன் பாடலின் பொருளில் சிவனை கேதாரம் முதலான தலங்களில் திகழ்பவன் என்னும்படியாகப் பாடியிருப்பார். மேலும் தியாகராஜரின் ‘எந்தரோ மஹானுபாவுலு’ என்ற பாடல் இராமாயணத்தின் சுந்தரகாண்டத்தில் ஶ்ரீ (லட்சுமி) வடிவமான சீதை அனுமனிடம் சொன்னதையே முதல் வரியாகக் கொண்டதால் ஶ்ரீ இராகத்திலேயே அமைத்தார் என்றும் சொல்லுவார்கள்.
  4. அப்புறம் பாடலின் பொருளுக்குத் தகுந்தாற்போல மென்மையாகவோ வலுவாகவோ பாடுவது போன்ற சிலவற்றையும் கேள்விப்பட்டிருக்கிறேன். தியாகராஜரின் நாட்டை இராகப் பாடலான ஜகதானந்தகாரகா என்ற பாடலில் ஆகாயத்தைக் குறிக்கும் சொல்லான ‘ககனம்’ வரும் இடமான  ‘ககனாதிப சத்குலஜ’ என்பதை மேல் ஸ்தாயி ஸ்வரங்கள் கொண்டு அமைத்திருப்பார் என்பது ஒரு எடுத்துக்காட்டு. இதுவும் ஒரு interpretation ஆக இருக்கும் வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் இவையும் பாடலின் அழகியல் அம்சங்கள் ஆகின்றன.

மேலுள்ளவற்றையே கிருஷ்ணா குறிப்பிட்டாரா? அப்படியானால் அவர் கருத்தின் நியாயம் புலப்படுகிறது. இந்த அம்சங்கள் குலையாமல் இப்பாடல்களை மறுவாக்கம் செய்வது முடியாததில்லையானாலும் எளிமையானதல்ல.

ஆனாலும் இளையராஜா ஒரு பழம்பாடலை மறுவாக்கம் செய்வது அவர் படைப்பூக்கத்தினால் நிகழ்வது. எனக்கு சிந்துபைரவி திரைப்படத்தில் வந்த மரி மரி நின்னே பிடித்தே இருந்தது. "Fan fiction" என்பது போல், "விசிறிகள்" தம் ஆதர்சப் படைப்பாளிகளின் படைப்புகள் போலவே படைப்பது எங்கும் காணக்கிடைக்கிறது. இளையராஜாவின் இந்த முயற்சி குறைந்த பட்சம் அம்மாதிரியே எனக்குப்பட்டது. 

ஒரு கருநாடக இசைப்பாடல் எந்தவிதமான அழகியலைக் கட்டமைக்கிறது? படைப்பு உண்மையில் நிகழ்கிறதா?  அதைக்கேட்பவர்கள் எதை இரசிக்கிறார்கள்? என்று எல்லாவற்றையும் கட்டுடைக்கும் கிருஷ்ணாவுக்கு இளையராஜாவின் இந்த மறுவாக்கம் ஆட்சேபத்திற்குரியதாக இருக்க வாய்ப்பில்லை என்றே நினைத்திருந்தேன்.  அவர் கேள்விக்குட்படுத்தும் அழகியல் அம்சங்களே (எடுத்துக்காட்டாக பக்தி தொடர்பானவை - மேற்சொன்னவையே காரணங்களாக இருக்கும் பட்சத்தில் ) குலைக்கப்படுவதற்காக அவர் இதை ஒப்புக்கொள்ளாதது வியப்பாக இருந்தது.

ஆனால் கிருஷ்ணா எந்தக் கருத்தையும் கொண்டிருப்பதும், அதைச் சொல்லுவதும் அவர் விருப்பம், சுதந்திரம். இந்தக் கருத்தினால் அவரைக் குறித்த என் மதிப்பும் அவர் மேலுள்ள மரியாதையும் மாறாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க