முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

101 கனவுகள் - 6. இராமநாதம்

MD இராமநாதன் முன்னால் உட்கார்ந்து அவர் பாட்டைக் கேட்டுக்கொண்டிருந்தேன்!

பாட்டில் இலயித்திருந்து, தாளத்தை மனத்திலிருத்தி எப்போதாவது கையில் தட்டிக்காட்டுவது அவர் வழக்கம். இதை மலைப்புடனேயே பார்த்திருக்கிறேன் - இதைத் தேர்ந்த இசைக்கலைஞர் அனைவரிடமும் கவனித்திருக்கிறேன். 

எனக்கோ, வலுவாகத் தொடையில் தட்டித் தாளம் போட்டாலும் பாட்டு தாளத்தில் நிற்காது. நான் சற்றும் பொறுமை இல்லாதவன். சோம்பேறி வேறு. சிறுவயதில் நன்றாகப் பாட வந்தது. எந்தப்பாட்டைக்கேட்டாலும் அதை அப்படியே திருப்பிப் பாடிவிடுவேன்.

நாட்பட குரலைப் பழக்குதல் பாடுதலுக்கு இன்றியமையாதது என்று புரிந்தது. நானோ கள்ளக்குரலில் பாடியே பல நாட்கள் சமாளித்து விட்டேன். குளியலறையில் உரக்கப் பாடுவது தவிர வேறொன்றும் இப்போது செய்வதில்லை. இதில் உள்ள பிரச்சனை நீண்ட நேரம் பாடினால் தொண்டை வரண்டு வலி கண்டு விடுவதுதான். 

எப்படிக் குரலைப் பழக்குவது? பெரியவர்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள் - வாயைத் திறந்து பாடச் சொல்லி. முடியவில்லை, முயலவும் இல்லை. 

இப்போது இராமநாதன் முன்னால் உட்கார்ந்து அலட்சியமாக அவர் பாட்டுக்கு அவ்வப்போது கையில் தாளத்தைப் போட்டுக்கொண்டிருந்தேன். அலட்சியம் வெளித்தோற்றத்தில் இருந்தாலும் மனது பதற்றமாக தாளத்தில் ஒருமிக்க முயன்றுகொண்டிருந்தது. 

MDR பாட்டை நிறுத்திவிட்டு நான் அவ்வாறு தாளம் போடுவது ஏனென்று கேட்டார். நான் “நீங்கள் மட்டும் தாளம் போடாமல்  இப்படிச் செய்கிறீர்களே?” என்று அவர் மாதிரியே நான் பாடும் “ஸா ம நி க ம ஜசுதாமய” வை ஸ்வராக்ஷரமாக இழுத்துப் பாடிக்காட்டினேன். அவர் சிரித்துக்கொண்டார்.

அப்புறம் நான் ஏதோ சினிமாத்தனமாகச் சொன்னேன்:

“என்கிட்ட உங்களுக்குக் கொடுக்கும்படியான தட்க்ஷணை ஏதுமில்லை. ஆனாலும் ரெண்டு சந்தேகம் கேட்டுக்கணும்”

அவர் “ட்க்ஷணை” பற்றி நான் சொன்னதை ஏதோ அசட்டுத்தனமானதாகப் புறந்தள்ளிவிட்டுக் கேள்வியைக் கேட்கச் சொன்னார்.

நான் கேட்டேன்:

“நீங்க இப்படி ஒடம்பே தாளமா இருக்கீங்க. எனக்குப் பாட்டு தாளத்தில நிக்கிறதில்ல. இந்தப் பக்குவத்த எப்படி அடையறது?

அப்புறம், குரலை வாத்தியமா எப்படிப் பழக்கறது?”

MDR சிரித்துக்கொண்டு பதில் சொல்ல ஆயத்தமானார். நானோ மனத்தின் ஒருமையெல்லாம் திரட்டி ஒன்றி கவனிக்கத் தயாரானேன்.

அந்த கவனக்குவிப்பில் கண்விழித்து எழுந்து விட்டேன். MDR இடம் யாரும் அப்படி நேரடியாக கேட்டிருப்பார்களா என்று தெரியாது. கனவாக இருந்தாலும் பதிலைக் கேட்காமல் விட்டதன் துயரம் எழுந்த பின்னும்...

(மே 20 இராமநாதன் பிறந்தநாள். 'இசைக்கலைஞர்களின் இசைக்கலைஞர்' இங்கே ஒரு பாடலை அவருக்கே உரித்தான நிதான கதியில் பாடுகிறார் - கௌரி மனோகரி இராகப்பாடல். இதற்குச் 'சின்னசிறு திலகம் வைத்து, சிங்காரமாய்ப் புருவம் தீட்டி' அலங்காரம் செய்து உலவ விடுகிறார். காலம் இவர் பாட்டுக்கு இயைந்து பைய நகர்கிறது.)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...