ஏதோ வேலையாக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். வழியில் ஒரு வீடு. வீட்டிலேயே தட்டி வைத்திருந்தார்கள் - ‘பேக்கரி’ ரொட்டிகளும் ‘கேக்’குகளும். உடன் இருந்த யாரோ சொல்கிறார்கள், அது நல்ல இடம் என்றும், முன்பதிவு இல்லாதவர்களுக்கு ஒன்றும் கிட்டாது என்றும். வீட்டிலே குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கிப்போகலாமே என்ற எண்ணத்தில் அழைப்பு மணியை அழுத்தினேன்.
கதவைத் திறந்துகொண்டு ஓரிளம்பெண் சிரித்துக்கொண்டே வந்தாள். பின்னோடு முண்டா ‘பனியன்’ அணிந்த ஒருவர் வந்தார் - அந்தப்பெண்ணின் தகப்பனாயிருக்கக்கூடும். அவரிடம் ஆங்கிலத் துரையே வெட்கும் ஆங்கிலத்தில் கேட்கிறேன்:
“இங்கிருந்து வாங்கிப்போக ஏதும் கிடைக்குமா?”
“நிச்சயமாக. நீங்கள் ஏதும் முன்பதிவு செய்திருக்கிறீர்களா?”
இதற்கு நான், “மன்னிக்க வேண்டும். போகும் வழியில் எதேச்சையாக இந்தத் தட்டியைப் பார்க்க நேர்ந்தது, அதனால் வந்தேன்” என்றேன்
அவர் கழுத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கண்ணாடியை மூக்கின்மேல் பொருத்திக்கொண்டு “உங்களுக்காக என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறேன்” என்று உள்ளே போனார்.
அந்தப் பெண் என்னை உள்ளே உட்கார அழைத்தாள். உள்ளே கண்ணாடிப் பெட்டிகளில் ரொட்டிகளும் பற்பல குளிர்பதனப் பெட்டிகளில் ‘கேக்குகளும்’ நிறைந்திருந்தன.
அவர் சொன்னார், “உங்களுக்கு ஒரு கிலோ அளவுள்ள இந்த ‘பேஸ்ட்ரி’ மட்டுமே தரமுடியும். இதை வாங்கிக்கொள்ளுகிறீர்களா?” என்று ஒன்றை நீட்டினார். சதுர வடிவில் ‘சாக்லேட்’ மற்றும் பாதாம் பருப்புகள் தூவிய மேற்பரப்புடன் பார்க்க நன்றாகவேயிருந்தது.
“சரி, இதை வாங்கிக்கொள்ளுகிறேன், நன்றி” என்றேன்.
அதற்கு அவர், “இதன் விலை சற்றே கூடுதலானது. உங்களால் வாங்க முடியுமா?” என்றார்.
எனக்கு அவர் அப்படிக்கேட்டது பிடிக்கவில்லை. அந்தப்பெண் நான் என்ன சொல்லப்போகிறேன் என்று என்னையே பார்த்தவண்ணம் இருந்தாள்.
சற்றே இறுமாப்புடன் சொன்னேன் “விலையைப் பற்றிக் கவலையில்லை”.
“நல்லது, நீங்கள் நேரில் வந்ததால் நாற்பது சதம் தள்ளுபடி செய்து தருகிறேன்” என்றபடி தாளில் ஏதோ கணக்குப் போட்டுவிட்டு எனக்குக் காட்டினார்.
ரூ 24,150 என்றிருந்தது!
திகைப்புடன் அவர்களைப் பார்த்தேன். விலையை முதலில் கேட்டிருக்கலாம், இப்படி வந்து மாட்டிக்கொண்டோமே! தள்ளுபடியில்லாமல் நாற்பதாயிரம் ரூபாயா ஒரு கிலோ ‘கேக்’? அநியாயம்!!
ஆங்கிலத்தில் பேசியிருக்கக் கூடாது. சரியான முட்டாள் என்று நினைத்துவிட்டார்களா? இப்படியும் ஏமாற்ற முடியுமா? என்ன சொல்லி நழுவலாம் என்று யோசித்துக்கொண்டே காற்சட்டைப் பையில் இருந்து ‘பர்சை’ எடுத்தேன். திறந்து பார்த்தால் துடைத்து வைத்தமாதிரி இருந்தது. கடன் அட்டைகளை எல்லாம் எதனாலோ எடுத்து வைத்துவிட்டுக் கிளம்பியிருக்கிறேன்.
சட்டென்று யோசனை வர, “மன்னிக்கவேண்டும் கடன் அட்டை எடுத்து வரவில்லை. வீட்டுக்குப் போய் எடுத்துவருகிறேன்” என்று பதிலுக்குக் காத்திராமல் வெளியேறி வீட்டுக்கு ஓட்டம் பிடித்தேன்.
கருத்துகள்