முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சும்மா

வாரயிறுதிகளில் விடியற்காலையில் எழுந்தால் ஓய்வு நாட்களின் நீளம் கூடும் என்பது நண்பரின் பரிந்துரை. சும்மாயிருக்கும் இந்நாட்களில் இதைப் பின்பற்றுவதில்லை. காலை பத்து மணிக்கே எழுந்து காப்பியைக் குடித்து, சிற்றுண்டி சாப்பிட்டு, மீண்டும் காப்பி குடித்து, மதிய உணவு முடித்து, சாயங்காலக் காப்பி குடித்து இரவுணவு உண்டு உறங்கப் போகும், ஒன்றும் செய்யாமல் இருக்கும் இத்தினங்களிலும் சாப்பாட்டு வேளைகளிலும், மற்ற பான வேளைகளிலும் ஆனதான ஒரு ஒழுங்கு இருக்கவே செய்கிறது. இடையில் டிவியில் இரண்டு தல்லிப்பொளிப் படங்கள், சுடோகு, லூயி லாமர், இணைய உலாவல்.

ஏதோவொன்றைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்பதில் இருக்கும் சோர்வு, ஒன்றும் செய்யாமல் இருப்பதிலும் இருக்கிறது என்பது ஆச்சரியமாயிருக்கிறது. உண்மையில் பயமாயிருக்கிறது. ஏனென்றால் இப்படியாகத்தானே வாழ்க்கையைக் கழித்து, நேர உபயோகத்தின் நன்மைகளை உபன்யாசிப்பவர்கள் முகத்தில் கரியைப் பூச வேண்டும் என்ற ஆசையில் மண்ணைப் போடுகிறது இந்த இரண்டாவது சோர்வு.

முதலிலேயே ஒன்றும் செய்வதில்லை என்று சங்கல்ப்பம் செய்துகொள்வதில் உண்மையான ஓய்வு தினமாக மனம் அதை வரிந்துகொள்கிறது. வங்கியில் வேலை, கரண்ட் பில் கட்டுதல், கடையில் பொருட்கள் வாங்குதல், வேறெங்கோ வண்டி எடுத்துக்கொண்டு போனது என்ற இப்படியான வேலைகளே உண்மையான வேலைகள் போலவும், டிவியில் இரண்டு பாடாவதிப் படங்கள் பார்த்ததை வேலையற்றதாகவும் உருவகப் படுத்திச் சோர்வுக்கான அஸ்திவாரம் போடும் மனது. யாரோ தத்துவக்ஞானி கடைத்தெருவில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததை ஒருவர் கேட்கப் போக, "எவையெல்லாம் எனக்குத் தேவையற்றவை என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று சொன்னதாகப் படித்த ஞாபகம்.

மொத்தத்தில் சும்மாயிருப்பதையும் உருப்படியாகச் செய்யமுடியவில்லை - சும்மாயித்தலின் காரணத்தை நமக்கோ பிறருக்கோ விளக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் கட்டுண்டிருப்பது மாயையன்றி வேறென்ன! நம்மைப் பற்றிய நமதும் பிறரதுமான தெற்றுத் தாரணைகளைத் திருத்தவே பாதி வாழ்க்கை கழிகிறது. இன்னுமொரு பாதி உணவிலும் தூக்கத்திலும் - இப்போதைப் போல.

கருத்துகள்

இரா. செல்வராசு (R.Selvaraj) இவ்வாறு கூறியுள்ளார்…
எண்ணி ரெண்டுன்னாலும் ரெண்டாயிரத்தேழுல ரெண்டு முத்தான இடுகை எழுதியிருக்கீங்கங்கறத நான் பாக்காம விட்டுட்டேன். எங்கயோ போய் உலாவி திடீரென ஒரு பொறி தட்ட யளனகபகவத் தேடி வந்தப்போ இந்த ரெண்டும் சிக்குச்சு. எப்படி இருக்கீங்க கண்ணன்?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...