முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இசைவிழா - சில எண்ணங்கள்

இன்னுமொரு இசைவிழா இங்கே. கருநாடக மரபிசை பலருக்கும் மனிதர் மனிதரை விலத்தி வைக்கும் மேட்டிமைக் குறியீடாகவே திகழ்கிறது. இந்த உறுத்துதல் இருக்கும்வரை என்னால் முன்போல இவ்விசையில் திளைக்கமுடியுமென்று தோன்றவில்லை.

பக்தி, மதம் மற்றும் இசைமும்மூர்திகளென அறியப்படுவர்களின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் என்று இசைக்குப் புறம்பான, "புற" விஷயங்களே முதன்மைப் படுத்தப் படுகின்றன என்பது இசையால் எல்லாம் ஒன்று என்கிற கொள்கையை நானே கேள்விக்குட்படுத்தும்படி செய்துவிட்டது.

இன்னொன்று, இம்மரபிசை மனோதர்மம் என்கிற மனவோட்டத்தைப் பிரதிபலிக்கிற, முன்னேற்பாடுகள் எதுவுமற்றவொரு கலை வெளிப்பாடு என்பதுவும் கேள்விக்குறியதே என்று எனக்குப் படுகிறது. இதிலே பாடப்படும் ராகங்களின் இலக்கண எல்லைகள் மேற்சொன்ன மும்மூர்திகளால் நிர்ணயிக்கப்பட்டவை. இவ்வரம்பிற்குட்பட்டே இந்த முன்னேற்பாடுகளற்ற வெளிப்பாடு நிகழ வேண்டியிருக்கிறது.

இந்தத் தலைமுறைக்கு முந்திய தலைமுறைப் பாடகர்கள் மற்றும் இசைஞர்கள் ஏதோவொரு தனித்தன்மையைக் கொண்டிருந்தார்கள். மதுரை மணியின் ஸ்வரக் கோர்வைகள், எம்.டி.ராமநாதனின் மெதுவான காலப் பிரமாணம், கே.வி.நாராயணசுவாமியின் நிரவல் என்று இந்தக் கலைஞர்களின் வெளிப்பாட்டிலே ஒரு உண்மைத்தன்மை இருந்தது. இதுவரை கண்டறியப்படாத, யாரும் கேட்டறியாத வழிகளிலே இக்கலை வெளிப்பாடு நடந்தது. இவ்வெளிப்பாட்டு முறைகளிலே இவர்களே முன்னோர்கள் என்பதிலே இந்த பாசாங்கற்ற கலைவெளிப்பாடுகளின் அனுபவத்தில் ஒரு சிலிர்ப்பு இருந்தது.

இந்தத் தலைமுறை பழையதன் நிழலே என்று தோன்றும் அளவுக்கு ஒரு 'நகல்' தன்மையைக் கொண்டிருக்கிறது - புகழ்பெற்ற ஓவியங்களின் நகல்கள் போல. எங்கும் நகல்கள் உண்மையானவற்றின் இடத்திலே வலம் வருவதில் விரைவிலே சோர்வேற்படுகிறது. கேட்ட பிடிகளே ராக ஆலாபனைகளிலே, கேட்ட பாடல்களே கச்சேரிகளில், கேட்ட வெளிப்பாட்டுமுறைகளின் தரக்குறைவான நகல்களே எங்கும்.

ஆக, போலித்தனங்களின் மொத்தவுருவாகப் போய்விடும் தீனமான நிலையிலேயே இம்மரபிசை இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. இப்போலி மேட்டிமை, பக்தி, மதக் கலப்பு, மற்றும் கலையின், கலைஞர்களின் உண்மையான வெளிப்பாடுகள் இல்லாத நிலை என்பவை இருக்கும்போதே இவ்விசைமரபு தழைக்குமாயின், நான் கேட்ட, அனுபவித்தவொன்று இதுவல்ல என்று சமாதானப் படுத்திக் கொள்ளுதலைத் தவிர வேறென்ன வழி?

பின் குறிப்பு: மைக் மார்க்விஸீ (Mike Marqusee) கருநாடக இசை அபிமானி என்பது தெரிந்திருக்கவில்லை. சாமானியருக்கெல்லாம் எட்டாத ஒன்று என்கிற விலத்துதலை எதிர்க்கும் வகையில் இம்மரபிசையைப் பற்றி இவர் எழுதியிருந்த இந்தக் கட்டுரையுடன் முழுதாக உடன்படுகிறேன். முன்முடிவுகளில்லாத, பழைய கலாச்சாரச் சுமைகள் இல்லாத, எதையும் அதன் உண்மையான அனுபவம் சார்ந்தே வரிந்துகொள்ளுகிற / பொருள்படுத்திக்கொள்ளுகிற மேற்கத்தியவர்களின் அணுகுமுறை எனக்குப் பிடித்திருக்கிறது.

இசை விழாபற்றி அவர் எழுதியுள்ள இன்னுமொரு கட்டுரை இங்கே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க