முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோர்வையற்ற சில மொழிச் சிந்தனைகள்

என் மகள்களுடன் ஒருநாள் விளையாட்டாக (ஆங்கிலத்தில்) பெயரடைகளுக்கும் வினையடைகளுக்குமான வித்தியாசத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். மீனா இவ்விரண்டையும் வேறுபடுத்தத் தெரியவில்லை என்றதால் அந்தப்பேச்சு வந்தது. நான் சொன்னேன்:

“வினையடைகள் வினைச்சொல்லை விளக்குவன. ஆனால், வினைச்சொற்கள் என்பன வினைகளின் பெயரைக்குறிப்பதால் அவைகளும் பெயர்ச்சொற்களே. அப்படிப்பார்த்தால், வினைச்சொல் என்றொன்று இல்லவேயில்லை, எல்லாமே பெயர்ச்சொற்கள்தாம். அதன்படி, வினையடைகள் எல்லாம் பெயரடைகளே. இன்னும், பெயர்ச்சொல்லை விவரிக்கும் பெயரடைகளும், அந்த விவரிப்பின் பெயரேயாதலால் அவைகளும் பெயர்ச்சொற்களே! அப்படியாக, மொழி பெயர்சொற்களால் மட்டுமேயானது.”

இருவரும் என்மேல் (இன்னும்) கொலைவெறியில் இருக்கிறார்கள்.



ஆனால் மொழி எப்போதுமே எல்லாவற்றிற்கும் பெயர்சூட்டுவதையே செய்கின்றது. மரம், காற்று, பூக்கள், என்றெழுதுவதெல்லாம் அந்தப் பொருட்களை நினைவுபடுத்தினாலும் மரம் என்று நான் இங்கே எழுதியிருப்பது மரமாகாது. சொற்கள் வெறும் குறியீடுகளே. இல்லாத பொருட்களைச் சொல்லால் இட்டுநிறைப்பது மொழி. என். எஸ். கிருஷ்ணனின், சொற்களின் முதலெழுத்தை மாற்றிப்போட்டுப் பேசும் வேடிக்கையான கோர்வை அவர் பாட்டொன்றில் வரும்: “உரையிலே தட்க்காரு”, “சிழந்தே, குரி!” என்பதுபோல. பழகியதற்கு மாறாக இருப்பதாலும், மாற்றியமைத்த சொற்களை நமக்குப் பழக்கமான மொழியிலேயே புரிந்துகொள்ள முயல்வதாலும் இது நமக்கு வேடிக்கையாய், சிரிப்பாய் இருக்கிறது. ஆனால் மொழியின் அடிப்படையே இதுதானே?

கவிஞர் கல்ப்பெட்டா நாராயணன் சொல்லுவார்: “உலகின் எல்லாப்படைப்புகளிலும் தெய்வீகமான அழகுள்ளது — மனிதனைத் தவிர்த்து. அதனாலே மனிதன் தன் உருவத்தையும், செய்கைகளையும் அழகாக்குவதில் முனைப்புக்காட்டுகிறான். அதிலும், மற்றெல்லா உயிரினங்களுக்கும் இல்லாத படைப்புத்திறன் மனிதனுக்கு மட்டுமேயிருப்பதால், அழகை வெளிப்படுத்துவதை அப்படைப்பூக்கத்தின் அடிப்படையாக வைத்த்துள்ளான். அதிலே, மொழியின் அழகு வெளிப்பாடாகக் கவிதை இருக்கிறது (சம்பவங்களின் — அவற்றைச் சொல்வதின் — அழகு வெளிப்பாடாகக் கதை இருப்பது போல)”

நான் நினைப்பது, இதற்கெல்லாம் அடிப்படையான, வெளிப்பாடுகளின் (expressions) அழகைக் கூட்டுவது மொழி என்ற மனிதனின் படைப்பு. ஒரு சமூகத்தில் வழக்கு காரணமாக இயற்கையாக உருவாகி வந்தது இயல்மொழி (Natual Language). மொழி பற்றி சாக்ரடீசுக்கும் கிரெட்டிலசுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் சுவாரசியமானது (எனக்குப் புரிந்துகொள்ளக் கடினமானதெனினும்).

கிரெடிலசின் கோட்பாடு (நான் மேல்சொன்ன, பெயர்சொற்களால் ஆன மொழியுலகில்) மொழிக்கும் அது குறிக்கும் பொருளுக்கும் இயல்பான தொடர்பு இருப்பதாக நம்புவது; அதிலும் ஒரு பிரதிபலிப்புத் தன்மை (mimetic virtue)இருப்பதான கற்பிதத்தை அடிப்படையாகக் கொண்டது. அந்தப் பெரும் உரையாடலின் ஒரு குட்டிப் பகுதி இங்கே:

Socrates: Do you admit a name to be the representation of a thing?

Cratylus: Yes, I do.

Socrates: But do you not allow that some nouns are primitive, and some derived and compound?

Cratylus: Yes, I do.

Socrates: Then if primitive or first nouns are meant to be representations of things, can you think of any better way of framing them than to assimilate them as closely as possible to those objects which they are to represent? or do you prefer the notion of Hermogenes and of many others, who say that names are conventional, and have a meaning to those who have agreed about them, and that it is convention which makes a name right; […] Which of these two notions do you prefer?

Cratylus: Representation by likeness, Socrates, is infinitely better than representation by any chance sign.*

*Plato, Cratylus (Jowett’s Translation) vol III, p. 98.

அடிப்படை மொழியியல் இக்கோட்பாட்டை மறுக்கிறது — மொழி தற்செயலானது, மற்றும் வழங்குதன்மை சார்ந்தது (arbitrary and conventional) என்பதே மொழியியல் நிலைப்பாடு. இதிலே கவிதையைப் பொருத்தமட்டில் மொழியின், தான் குறிக்கும் பொருளைப் பிரதிபலிக்காத/ நடித்துக்காட்டாத தன்மை மொழியின் குறைபாடாகிறது. இம்மொழிக்குறைபாடே இலக்கியத்தில் கவிதையின் இடத்தைச் சாத்தியமாக்குகிறது. கவிதையின் இருத்தலை அது நியாயப்படுத்திடுகிறது. இதன் தொடர்ச்சியாக மொழியே இரண்டு வகையாக இயங்குவதாகிறது — ஒன்று மொழியியல் சொல்லும் ‘பொருளைக் குறிக்கும்’ தற்செயலான, வழக்கமான செயல்பாடு; மற்றொன்று (வேண்டிய) பொருளைப் பிரதிபலிக்கும் தன்மை கொண்ட கவித்துவ மொழியாய்ச் செயற்படுவது. இதைச் (மொழி இருவகையாகச் செயற்படுவதும், கவிதையின் இருத்தலை நியாயப்படுத்துவதும்) சொல்வது ஜெரார்ட் ஜெனே (Gérard Genette) — பிரெஞ்சு இலக்கிய அறிஞர்.

எப்படியும், ஒரு சொல் மொழியின் வகுக்கப்பட்ட கட்டுப்பாடுகளினால் பொருளுக்குள் சிக்கியுள்ளது எனலாம். அந்தச் சிக்கலிலிருந்து மொழியை விடுதலை செய்வதாகவும் இருக்கிறது கவிதை. அமெரிக்கக் கவிஞரான ஸ்டெய்ன் (Getrude Stein) அப்படியான முயற்சியைக் கைக்கொண்டார். அவரது Tender Buttons தொகுப்பிலிருக்கும் ஒரு உரைநடைக் கவிதை இது:

A Carafe, that is a Blind Glass

A kind in glass and a cousin, a spectacle and nothing strange a single hurt color and an arrangement in a system to pointing. All this and not ordinary, not unordered in not resembling. The difference is spreading.

இலக்கண ஒழுங்கிருந்தாலும், பொருள் ஒழுங்கற்றதாயிருக்கும் இவற்றைச் சிலர் அபத்தங்களாகவும், பிதற்றல்களாகவும் இருப்பதாக விமர்சித்தார்கள். எனக்கு, (மொழியிலக்கணத்தால் ஆன) வாக்கியமானது ‘குறிகளை அடுக்கி வைக்கும் முறை’ என்று அவர் சொல்வதாகவே புரிந்தது (“an arrangement in a system to pointing” — “உரையிலே தட்க்காரு”, “சிழந்தே, குரி!”). தமிழில் கோணங்கியின் எழுத்து இம்மாதிரியான வகையைச் சார்ந்ததெனினும் ஸ்டெய்ன் போல மொழியைப் பொருளிலிருந்து விடுவிக்கும் நோக்கில் அவர் அதைச் செய்யவில்லை என்பதால் எனக்கு அதை அப்படி அணுகவும் கடினமாகத்தான் இருக்கிறது. பாரிஸ் ரிவ்யூ இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஸ்டெய்ன் சொல்கிறார்:

Look here, being intelligible is not what it seems, after all all these things are a matter of habit…You mean by understanding that you can talk about it in the way that you have the habit of talking … putting it in other words … but I mean by understanding enjoyment. …Don’t you see what I mean? If you enjoy it you understand it, and lots of people have enjoyed it so lots of people have understood it. You see that is what my lectures are to be. They are to be a simple way of telling everybody this thing, that if you enjoy it you understand it and so if I am telling them this about why my punctuation is, why my so-called repetition is, what my prose is and what my poetry is and what my plays are and what my English literature is and what my pictures are and I am telling them all this simply as I tell everything you will see,they will understand it because they enjoy it.

ஸ்டெய்ன் சொல்வது, மொழி அறிவார்ந்த பொருள் தருவதாயிருப்பது நாம் அப்படிப் பழகிவிட்டதாலேயே என்பது தான். மொழி என்பது அடிப்படையில் தகவல் பரிமாற்றத்துக்கான பயிற்சி தான். அந்தப் பயிற்சியின் பலனே நாம் கேட்பவற்றையும், படிப்பவற்றையும் பொருள்படுத்திக்கொள்வது. அதாவது, நாமெல்லோரும் சேர்ந்து மரத்தைக் காட்டி, இந்தப் பொருளைக் குறிக்க ‘மரம்’ என்ற குறியை வைத்துக்கொள்வோம் என்று ஒப்பி, அதன்படி கேட்பவற்றை, படிப்பவற்றை ‘டீகோட்’ செய்துகொள்கிறோம். பயிற்சியினால் இந்த ‘டீகோடிங்’ நமக்கு லாகவமாகக் கைவருகிறது. அப்படிக் கோர்வையும், பொருளொழுங்கும் இல்லாமல் பேசவோ எழுதவோ முடியாதபடிக்கு கற்பிக்கப்பட்டுக் கெட்டுக் குட்டிச்சுவராயிருக்கிறோம்.

இப்படியாகப் பொருளுக்குள் அடைபட்ட மொழியை விடுவிக்கும் முயற்சியை ஸ்டெய்ன் மேற்கொண்டார். கொடிகளில், தாவரங்களில் இருக்கும் மலர்களை இனப்பெருக்கத்தின் கருவிகளாகப் பார்க்காமல், அழகின் குறியீடாக வரிந்துகொண்டு, அவற்றை மாலையாகத் தொடுத்து அலங்கார பொருளாக்கியது போல மொழியை, சொற்களை, அவை தரும் அனுபவத்திற்காகக் கோர்த்தார் என்று கொள்கிறேன். பள்ளியில் ஏழாம் வகுப்புக் கணக்காசிரியர் மாணவர்களை வாய்க்கு வந்த பெயர் சூட்டி அழைப்பார். அதிலும் உமா மகேஸ்வரன் என்கிற என் பக்கத்து இருக்கைக்காரனை ‘சிவகுருநாதா’ என்றே அழைத்துப் பேசுவார். அவனது உருவம் அவருக்குச் ‘சிவகுருநாதன்’ என்ற பிம்பத்தைத் தருவதாக இருந்திருக்கலாம். 

இக்கவிதைகளை அறிவுபூர்வமாக ஏற்றுக்கொண்டு அனுபவிக்க முயல்கிறேனானாலும், உணர்வுபூர்வமாக இன்னும் ஏற்க, அனுபவிக்கத் தெரியவில்லை — ஆனால் அதற்கான சாத்தியங்களே இவற்றை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுவன.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...

பகற்கனவு

அலுவலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பொழுது உணவு இடைவேளைக்குப் பின் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ட்ரீம் அடிக்கும் அந்த 30 நிமிடங்கள் தான். இதற்கப்புறம் ஒரு 10 நிமிடக் கோழித்தூக்கம் நிச்சயம் உண்டு. அலுவலக நேரத்தில் தூங்கியதால் ஊழியரை விட்டுக்கு அனுப்பின சம்பவத்திற்குப் பிறகுமா? என்று வாய் பிளக்காதீர்கள். சீனாவில் எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒரு 6 மாதம் வேலை பார்த்தேன். காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். 11:45 க்கு மதிய உணவு. அப்புறம் கட்கத்தில் ஒரு பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டு டூத் பிக்கினால் பல்லை நோண்டிக்கொண்டே இடத்திற்கு வந்து, இருக்கையை நகர்த்திப் போட்டு "joining kit" உடன் வருவதாக நான் சந்தேகப்படும் லேசான மெத்தையை விரிப்பது. ஷூவைக் கழற்றி ஒரு ஓரமாகப் போட்டு, கொஞ்ச நேரம் பேப்பரை மேய்வது. அப்புறம் லைட்டை எல்லாம் அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆனந்த சயனம். 2 மணிக்குத் தான் மறுபடி லைட் போடுவார்கள். ஒரு முறை 1 மணியளவில் உணவு முடிந்து அலுவலகம் வந்த போது, இருட்டான காரிடாரில் சுவற்றைத் தேய்த்துக் கொண்டே நடக்க வேண்டிவந்தது. இப்படி சுகமாக, இவ்வளவு ந...