மலையாளக் கவிஞர் கல்பெட்டா நாராயணனின் பேச்சைக் கேட்பது ஒரு சுகம். பேசும் சொற்களை அன்றைக்குதான் கண்டுபிடித்தது போல கண்கள் மின்ன, சொற்-ஸ்வரங்களை நீட்டிச் சுருக்கி, வாக்கியங்களை அவர் இசைப்பார். உள்ளடக்கம் என்னவாயிருந்தாலும் பேசும் பாங்கே எல்லாவற்றையும் சுவாரஸ்யமானதாக்கிவிடும்.
வயநாடு இலக்கிய விழாவில் அவர் பேசும்போது, தாம் எழுதிய 'ஆசுவாஸம்' என்ற கவிதையைச் சொன்னார். மலையாளத்தில்தான் இன்னும் கவிதை 'பாடுகிறார்கள்'. சில கவிதை 'சொல்லல்கள்' இசையுடன் பாட்டாகவே செய்யப்படுவதுண்டு.
வடமொழிக் கலப்பு இருந்தாலும், தமிழின் 'சென்சிபிலிட்டி'யே மலையாள மொழிக்கும் பொருந்திவருகிறது. இதனாலேயே இக்கவிதைகளை நாம் தமிழக் கவிதைகள் போலவே வாசிக்கலாம், அனுபவிக்கலாம்.
இனி, 'ஆசுவாஸ'த்தின் (என்) மொழிபெயர்ப்பு:
நிம்மதி
- கல்ப்பெட்டா நாராயணன் (மலையாளம்)
அம்மா இறந்தபோது
நிம்மதியாயிற்று.
இனி நான் இராப்பட்டினி கிடக்கலாம்
தொல்லை பண்ண யாரும் இல்லை.
இனி உலர்ந்து காயும்வரை நான் தலைதுவட்ட வேண்டியதில்லை
யாரும் முடிக்கற்றையை விலக்கிப் பார்க்கமாட்டார்கள்.
இனி நான் கிணற்றின் ஆள்மறைவில் உட்கார்ந்து
தூங்கியாடிக்கொண்டே புத்தகம் படிக்கலாம்
பாய்ந்தெத்தும் கூக்குரல் என்னை
திடுக்கிட்டெழச் செய்யாது.
இனி அந்திநேரங்களில் வெளியே செல்லும்போது
நான் டார்ச் எடுத்துச்செல்ல வேண்டாம்
விஷம் தீண்டி
ரோமத்துளைகளிலூடே
இரத்தம் கசிந்து செத்த
பக்கத்துவீட்டுக்காரனை நினைத்து
உறக்கத்தினின்றும் விதிர்த்தெழுந்திருந்த மனது
நேற்றைக்கு இல்லாமலானது.
இனி நான் சென்றுசேருமிடத்தில் உறங்கலாம்
நான் வந்துசேர்த்தால் மட்டுமே
அணையும் விளக்குள்ள வீடு
நேற்றைக்கு அணைந்துவிட்டது.
நான் அனுபவிக்கும் அத்தனையும் தன் குற்றமே
என்ற கர்ப்பகால நினைப்பிலிருந்து
அம்மா நேற்று விடுதலையடைந்தாள்.
கடைசியில் அம்மா என்னைப் பெற்றுத் தீர்த்தாள்.
உலகில் உடல்வேதனை காரணத்தாலன்று
துக்கத்தால் இனியாரும் அழ மாட்டார்கள்.
இது கவிஞர் நினைவிலிருந்து சொல்லியது. இதன் பிரசுர வடிவம் இங்கே.
கருத்துகள்