முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எம்.டி.ஆர்

சுகுமாரனின் ”தனிமையின் வழி” படித்துக் கொண்டிருக்கிறேன். கோவை விஜயா பதிப்பகக் கடையில் வாங்கியது - ஒரு காரணம் எம்.டி.ராமனாதன் பற்றிய உயிர்மைக் கட்டுரை இதிலே இருந்தது (இன்னொன்று கோவைக்காரர் என்பது) நண்பன் ஒருவன் இதன் பக்கங்களை உயிர்மையில் வந்தவுடன் ஸ்கான் செய்து அனுப்பியதை ஒரு பொக்கிஷமாகவே இன்னும் வைத்திருக்கிறேன். பொதுவில் எம்.டி.ராமனாதன் பற்றிய எதுவும் பத்திரிகைகளிலோ இணையத்தளங்களிலோ கிடைப்பதில்லை. ஆனால் எம்.டி.ராமனாதனின் இசைக்கச்சேரியை நேரிலமர்ந்து பார்த்தது மட்டுமல்லாமல், அவரைச் சந்தித்துப் பேசவும் செய்திருக்கிறார் சுகுமாரன். பொறாமையாக இருக்கிறது.

எண்பதுகளுக்கு முன்னால் (தென்னிந்திய மரபு) இசையை அறிந்து, கச்சேரிகளைக் கேட்கும் வாய்ப்புப் பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள். அம்மாதிரிப் பழைய கச்சேரி அனுபவஸ்த்தர்கள் தரும் சின்னச் சின்னத் தகவல்களின் தொகுப்பே ராமனாதன் பற்றி எனக்குத் தெரிந்த சொற்பம். பணமும், செல்வாக்கும், கோஷ்டியும், மோசடியும், கபடமும் நிறைந்த புதுச் சந்நியாசிகளின் நடுவே எல்லாம் துறந்து, தன்னையறிந்து கொண்ட, கண்டுகொள்ளப்படாத, தன்வழியே போகிற பரதேசிச் சாமியாரின் நிலைதான் ராமனாதனுக்கு இசை உலகம் மற்றும் இசை ரசிகர்களின் மத்தியிலே. பக்தி, ஆன்மீகம் என்கிற மிகையுணர்ச்சிகளின் தாக்கத்துக்கு உட்பட்ட இம்மரபிசையிலே கலைசார்ந்த ஆக்க வெளியீடுகளும், தேடுதல்களும் இரண்டாம்பட்சமாகவே இருந்து வருகின்றன.

இதிலே கலையை போஷிக்கிற, மேன்மைப்படுத்துகிற, அருமையான சிருஷ்டித்தன்மை கொண்டவராக இருந்த ராமனாதன் புறக்கணிக்கப் பட்டது என்னை பாதித்தது. இந்தப் புறக்கணிப்பே எனக்கு அவர்மேல் இன்னும் மரியாதையும், அவரைப்பற்றிய தகவல்களை அறிய ஆவலையும் ஏற்படுத்தியது. மரபார்ந்த வழைமைகள் மாறுதலுக்குட்படுத்தப்படும் போது ஏற்படுகிற எதிர்ப்பும், புறக்கணிப்புமே ராமனாதன் எதிர்கொண்டது. ”தனி வழி நடப்பவனின் எல்லா துக்கங்களையும் அவமதிப்புக்ளையும் எம்.டி.ஆர் அனுபவித்திருக்கிறார்” என்கிறார் சுகுமாரன். உண்மை. அவரைப் பற்றைய எதிர்மறையான எல்லாக் கருத்துகளும் எனக்கு அவர்மேல் மதிப்பையே ஏற்படச் செய்கின்றன.

”அவன் பாடும்போது ஒரு நெலைக்கண்ணாடியத் தான் முன்னாடி வைக்கணும்” என்று பாட்டி சொல்கிறபோதும், கச்சேரிக்கு வாசிக்கவென்று அழைக்கவரும்போது ”இழு இழுன்னு இழுப்பான். இவனுக்கு வாசிக்க முடியாது” என்று மிருதங்கக் கலைஞன் ஒளிந்து கொள்ளும் கதை கேட்டபோதும், ”அவர் பாடுகிற சுருதிக்கு வயலின் கம்பியெல்லாம் தளர்த்தி, தொளதொளன்னு, சத்தமே வராது”, மற்றும் “அவர் பாட ஆரமிச்ச ஒடனே மொதல் வரிசையில ஒரு குழந்தை பயந்து அழுதது” என்ற எள்ளலுக்கும் மனத்தில் மதிப்பே.

ஒரு பெரிய தொகையைச் செலவழித்திருக்கிறேன் - அவர் பழைய கச்சேரிகள் பலவற்றைச் சேமிக்கவென்று. இப்போது நாற்பதற்கும் மேற்பட்ட கச்சேரிகளை வட்டுகளில் சேமித்திருகிறேன். நினைத்தபோது ஒரு கச்சேரியை கேட்பது என்றிருப்பது வசதியான வாழ்க்கையின் உச்சம் போலிருக்கிறது. ”’மற்றவர்கள் வாதாபி கணபதிம் பாடும்போது அன்னப்பறவை நீந்துவது போல இருக்கும். நீங்கள் பாடுகிறபோது யானை நடப்பதுபோல இருக்கிறது’ என்று சொன்னபோது எம்.டி.ஆரின் ஒன்றரைக் கண்ணில் ஒரு முதிர்ந்த குழந்தையின் சிரிப்பு” என்று சுகுமாரன் எழுதியதை அறிந்து கொள்ள எம்.டி.ஆரின் ஒரு பழைய நிகழ்ச்சி ஒளி-ஒலி வடிவில் வைத்திருக்கிறேன். நெளிநெளியாகப் போகும் மங்கலான படத்தை மீறி அதை ரசிக்கிறேன். இது ஒரு பெரிய பொக்கிஷம்.

“ராமனாதனின் இசையும், நல்ல விஸ்கியும் உயிர்வாழப் போதுமானது” என்கிற மாதிரி ஒரு கேரளத் திரைப்பட இயக்குனர் சொல்வாராம். என்னவிருந்தாலும் மலையாளிகள் ரசனை மிகுந்தவர்கள்...

தனிமையின் வழி - சுகுமாரன், உயிர்மை பதிப்பகம்

கருத்துகள்

Santhosh Guru இவ்வாறு கூறியுள்ளார்…
புத்தகம் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி. வெங்கட் சாமிநாதனின் கட்டுரை ஒன்றில் இவரைப்பற்றிய குறிப்பினை படித்து பிரமித்து பலமுறை தேடியுள்ளேன். உங்கள் கட்டுரை இந்த புத்தகத்தினை படிக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. நன்றி.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
சந்தோஷ்,

மன்னிக்கவும் - கொஞ்சம் குளறுபடி ஆகிவிட்டதென்று நினைக்கிறேன். "தனிமையின் வழி" சுகுமாரன் கட்டுரைகளின் தொகுப்பே; எம்.டி.ஆர் பற்றிய புத்தகம் அல்ல. நான் குறிப்பிடும் கட்டுரை நீங்கள் எனக்கு அனுப்பியது. அதை மீண்டும் படித்ததன் தொடர்ச்சியாக இந்தப் பதிவு. சுகுமாரன் கட்டுரையில் எம்.டி.ஆர் பற்றிய இரண்டு நூல்களைக் குறிப்பிட்டுள்ளார். அதைத் தேட வேண்டும்.

-கண்ணன்
பரத் இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான அறிமுகத்திற்கு நன்றி!!
பரத் இவ்வாறு கூறியுள்ளார்…
http://www.youtube.com/user/mdramanathan

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க