முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இன்னுமொரு புத்தக மீம்

ராம்கி அழைத்ததும் நீண்ட நாட்களாய் எழுதாமலிருக்கும் ப்ளாகை தூசு தட்டிப் புதுப்பிக்கலாமென்று கிளம்பிவிட்டேன். ஆனாலும் 32 கேள்விகள் கையை உடைத்துவிடும்போல இருந்ததால் நிறையக் கேள்விகளை சாய்ஸில் விட்டுவிட்டேன்.

1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது?

பாக்கெட் நாவல், மாலை மதி என்று ”சாணி சாணியாக” பல்ப் படித்திருக்கிறேன். அம்மா அரசுயர் பள்ளி நூலகத்திலிருந்து கொண்டு வந்த கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா
மோகனாம்பாள் விவரம் தெரிந்து படித்த முதல் நாவல்.

2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?

பள்ளி நாட்களிலிருந்து.

3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?
பொதுவாக நாவல் என்கிற வடிவத்தில் ஒரு பிடிப்பு இல்லாததால், படிக்கிற நாவல்களில் ரகம் பிரிப்பதில்லை. பொதுவில் பாத்திரப்படைப்பிற்கும் கதைக் களனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் படுகிற நாவல்கள் மனதில் நிலைக்கின்றன. இருந்தாலும், வரலாற்றுக் கலப்புடன் எழுதப்பட்ட நாவல்கள் எனக்கு விருப்பமானவை.

4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?
பரிந்துரைகளின் பேரிலேயே நாவல்களைத் தேர்ந்தெடுகிறேன். அதிக நாவல்களை நாடிப் படிக்கும் வழக்கம் இல்லை.

5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
இலக்கிய வரலாறு தெரியாவிட்டாலும், கதை சொல்லுதல் என்கிற பழைமையான மரபில் இருந்து நாவல் வடிவம் இயற்கையாகப் பொருந்தி வந்திருக்கிறது என்பதை அனுமானிக்க முடிகிறது. புதிய உத்திகள், நடை, வட்டார வழக்கு, என்பவை இவ்வடிவத்தை இன்னும் மெருகேற்றியுள்ளன என்றாலும், கதைப்போக்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பவையாகவே உள்ளன நாவல்கள்.

சிறுகதை என்கிற சிறிய வடிவில் வாழ்க்கையின் ஒரு தெறிப்பை/ஒரு பரிமாணத்தை/ஒரு மனநிலையை/ஒரு நிகழ்வை/ஒரு குழப்பத்தை/ஒரு உணர்வை அவை தரும் புதிய அர்த்தங்களையும் புரிதல்களையும் சேர்த்துக் கொடுப்பது ஒரு சாகசமாகவே தோன்றுகிறது. என்னைப் பொருத்த வரையில் இது கொண்டாடப் படவேண்டிய ஒரு வடிவம்.

6. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?
தெரியவில்லை.

7. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?
மகிழ்ச்சியாக இருக்கும்.

8.நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?
இல்லை

9. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?
குறிப்பிட்ட நேரம் இல்லையானாலும், படுக்கப்போகும்போது ஆரம்பித்து, சில நேரம் அதிகாலை வரை வாசிப்பதுண்டு.

10. பாதி வரைப் படித்து, முடிக்காமல் போன நாவல்கள் எவை?
அதிகம் இல்லை. அரசூர் வம்சம் ஏனென்று தெரியவில்லை.

11. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?
ஒன்றும் இல்லை.

12. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை?
விஷ்ணுபுரம் - நண்பன் பரிந்துரைத்தது.

13. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?
மொத்தமாகவே பத்து நாவல்கள் தான் தேறும் என்று நினைக்கிறேன். மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு, மானுடம் வெல்லும், வானம் வசப்படும், மகாநதி, வாடிவாசல், காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன், புலிநகக் கொன்றை.

14. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை?
பிறமொழி நாவல்கள் எதுவும் படித்ததில்லை

15. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை?
ஆங்கிலத்தில் பல குப்பைகளை வாசித்திருந்தாலும் ‘கனமான’பிறநாட்டு நாவல்கள் எதுவும் படித்ததில்லை (வெ.ஸ்ரீராமின் மொழிபெயர்ப்பில் அந்நியன் தவிர)

16. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?
அம்மா வந்தாள், மரப்பசு...

17. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?
உண்டு.

18. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.
இல்லை. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் Bertram Wooster போல வாழ்க்கை இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்த்து, கொஞ்சம் நாள் கனவும் கண்டதுண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...