முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நமக்கான பிரத்யேக இடங்கள்

கண்ணே கண்ணம்ம!

ஆறடி நிலமே சொந்தமடா என்று தத்துவார்த்தமாகப் பாடினாலும், நமக்கான பிரத்யேக இடங்கள் நமக்கே சொந்தம். இவைகளை அளக்க முடிவதில்லை. பேருந்து இருக்கைகளிலும், இன்ன பிற உட்காருமிடங்களிலும் ஒடுங்கி உட்கார்ந்ததில் ஒல்லியான உடம்புக்காரனாக இருக்கிறேன். இனி இதை ஒரு மரபணுச் செய்தியாக அடுத்த தலைமுறைகளுக்கும் அனுப்பச் சித்தமாகிவிட்டது உடம்பு. இனி வருவோரெல்லாம் எங்கும் உடம்பைக் குறுக்கிக் கொள்ளுதலை இயல்பாகக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் சொற்பமான இடமே எனது தேவை. ஆனால நாம் இயங்க, உழல, சூக்குமமான இடங்கள் தாராளமாகத் தேவைப் படுகின்றன.

நம் சிந்தனைகள், கோட்பாடுகள், அன்பு, காதல், விருப்பு-வெறுப்புகள், சுதந்திரம், சுயமரியாதை போன்றவற்றை இந்த இடத்திலே சேமித்திருக்கிறோம். யாரும் இந்த இடங்களை ஆக்கிரமிப்புச் செய்தால் நாம் இயங்குவதற்கு நெருக்கடியாகிவிடுகிறது; மூச்சு முட்டுகிறது. அது நம்மை இயல்பாக இருக்கவிடுவதில்லை. மலர்களும், புட்களும், வண்ணத்துப் பூச்சிகளும் தத்தம் இயல்பான இடங்களிலே இருப்பதில் தானே மிளிர்கின்றன? என் இடம் என்வசமிருப்பதினாலேயே நான் நானாகிறேன். நம் ஒருவருக்கொருவர் மீதான மதிப்பும், மற்றவர் இடங்களைப் புரிந்துகொள்வதில் தானே இருக்கிறது?

நட்பும், காதலும், திருமணமும் இந்தப் பிரத்யேக இடங்களை ஆக்கிரமித்துக் கொள்வதற்கான அனுமதிச் சீட்டுக்கள் இல்லை என்பதை நீ அறிவாய். ஆனாலும் சில நேரங்களில் நம் இடங்களை இவைகளின் (நட்பு, காதல்) பொருட்டு விட்டுக்கொடுக்கக் கூடாதா என்று சிறுபிள்ளைத்தனமாக ஏங்குதலும், கோபித்துக் கொள்ளுதலும் இயல்பே. ஆனால்...

நான் உன்னை முழுமையாக நேசிக்கிறேன். உனக்கே உனக்கான இடத்தை அங்கீகாரம் செய்கிறேன்; அதை மதிக்கிறேன்.

தோழமை என்பது இதுதானே?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க