முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மா ரமணன், உமா ரமணன்!

இரண்டு உன்னதமான கலைஞர்களை எப்படியோ ஒரே சமயத்தில் பெற்றிருப்பது உலகக் கிரிக்கெட்டிற்குக் கிடைத்த பேறு. இருவரும் சமீபத்தில் அவர்களின் துறைகளில் சாதனை படைத்திருக்கிறார்கள். அணுமுறையாலும், ஆடுவதின் இயல்பாலும், குணாதிசயங்களாலும் வேறுபட்ட இரண்டு தனித்துவமான ஆளுமைகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கிறது மனது.

லாராவின் irregularity யாராலும் புரிந்துகொள்ள முடியாததாக இருந்திருக்கிறது. வீழ்ச்சியடைந்ததாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கும் போது அற்புதமான ஒரு ஆட்டத்தில் மீண்டு வருவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருக்கிறார். சிறப்பாய் ஆடிய அநேக ஆட்டங்கள் இவர் அணியை வெற்றி பெற வைத்ததில்லை. இவர் ஆடிய 121 டெஸ்ட்களில் இவர் அணி 56 முறை தோற்றிருக்கிறது.

டெண்டுல்கர் ஒரு காலத்தில் குருவி தலையில் பனங்காய் போல இந்தியாவின் மொத்தச் சுமையையும் பலரின் எதிர்பார்புகளையும் தாங்கி இருந்ததில் அவர் ஆட்டம் பாதித்தது. சமீபத்திய உடலுபாதைகளால் அதிக ஓய்வு எடுக்கும்படி வந்ததும், மீண்டு வரும் முதல் ஆட்டத்திலேயே அவர் நன்றாக ஆடவேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் அவர் மனதில் இன்னும் கிலேசத்தை உண்டு செய்திருக்கும்.

"மார ஜனகன், குமார ஜனகன்..."

லாராவின் ஆட்டமுறை தனித்துவமானது. பந்து வீசப்படும் நேரத்தில் அதிகமாக குறுக்கே நகர்ந்து, மட்டை எங்கோ மேலிருந்து வந்து ("வாம்மா மின்னல்" என்கிற மாதிரி) பந்தைப் பளீரென்று அடிக்க, பந்து தடுப்பாளார்களை வெட்டிச் செல்லும். இவர் மட்டை சுழற்றும் பாங்கில் ஒரு பொறியும் துள்ளலும் இருக்கும் - க்ரீஸில் சட்டென்று குறுக்கே குதித்து இவர் வெட்டியாடுவதில் ஒரு நடன நளினமும், கம்பீரமும் ஒருசேரத் தெரியும். கை இருக்குமிடத்தே பார்வையும், பார்வை யிருக்குமிடத்தே மனதும், மனதிருக்குமிடத்தே பாவமும் என்பது போல ஒரு தாண்டவ வடிவாயெனக்குத் தோன்றும் அவர் ஆட்டம்.

பந்து வீசப்படும்போது சிறிதாக முதல் நகர்வு, அப்புறம் பந்துவீச்சின் திசை மற்றும் நீளத்திநை அரை நொடிக்கும் குறைவான நேரத்தில் கணித்து, அதற்கேற்ப அடுத்த நகர்வு என்று சிக்கனமான, நிதானமான அசைவுகள் ஸச்சினுடையது. நேரான மட்டையின் நடு செண்டரில் பந்து படும் அளவிற்குத் வெளித்திறந்து வரும் மட்டையடி பாணி . மட்டையைக் கவிழ்த்துத் துடுப்புப் போடுவது போல ஆடும் paddle sweep என்கிற தனித்துவமான ஷாட் உட்பட, கிரிக்கெட்டின் மொத்த மட்டையடி முறைகளும் இவரிடம் அனாயாசமாய் வெளிப்படும். நிதானமும் நேர்த்தியும், இலக்கணச் சுத்தமும் இயல்பாய் கைவரப்பெற்றவர்.

"மலைமேல் உறைபவன், பாற்கடல் அலை மேல் துயில்பவன்..."

தன் கலையிலே முற்று முழுதாக அமிழ்ந்துவிட்ட ஒரு கலைஞனின் வெளிப்பாடுகள் முற்றிலும் எதிர்பாராதவையாகவும், எதனாலும் வரையறுக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாமல் இருப்பது போலவே தான் லாராவின் ஆட்டமும் எனக்குத் தோன்றுகிறது. நன்றாக அமைந்த பொழுதுகளில் பித்துப் பிடித்தது போல 100, 200,300, 400 என்று ஓட்டங்களைக் குவிக்கும் போது சாமானியர்களின் அறிவுக்கு எட்டாத உயரத்தில் தான் இருப்பதை ஒரு வெறியுடன் அவர் பறை சாற்றுவது போல இருக்கும். வேறு சில சமயங்களில் இந்த ஆளுமையைச் சந்தேகத்திற்கு இடமாகும் வகையில் அவர் ஆட்டமிழந்து விடுவதும் உண்டு. புல்லாங்குழல் மாலியின் கச்சேரிகள் பற்றி இப்படிச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன் - லாராவின் சில இன்னிங்ஸ்களைப் பார்த்தால் இவ்வாறு சொல்வதை விளங்கிக் கொள்ள முடியும் போலவிருக்கிறது.

தான் செய்யும் வேலையில் மிகுந்த நேர்த்தியும், திறமையும், கடினமானவற்றையும் எளிதாக முடித்துவிடும் கைதேர்ந்த வித்தகர் ஒருவர் நமக்களிக்கும் ஆசுவாசத்தையும் தன்னம்பிக்கையையும் ஸச்சினிடம் அனுபவிக்கலாம். கிரிக்கெட் ஒரு வாழுமுறை - அதிலேயே லயித்து, அதையே சிந்திப்பதில், எல்லாக் கோணங்களில் இருந்தும் அவதானிக்கும் செஸ் அணுகுமுறை சச்சினுடையது.

பலம் பொருந்திய எதிரிகளையும் போட்டிகளையும் சம்பாதிப்பது திறமையின் ஒரு அடையாளம். ஸச்சின் மற்றும் லாராவை எதிரணியில் பெறுவதென்பது பந்துவீச்சாளர்கள் மட்டுமன்றி தடுப்புத் தரப்பில் இருக்கும் எல்லோரையும் தம்முடைய ஆட்டத்தரத்தை உயர்த்திக் கொள்ளச் செய்வதற்கு ஏதுவாகிறது!

லாராவும் டெண்டுல்கரும் ஏனோ அணித்தலைவர்களாக வெற்றியடைந்ததில்லை. லாரா தலைமையில் அவர் மட்டுமே ஆடிக்கொண்டிருந்ததும், ஸச்சின் அவர் தலைமையில் சரிவர ஆடாததும் தத்தம் அணிகளுக்கு சாதகமாக அமையவில்லை.

உலகிலேயே அதிக ரன்களும் அதிக சதங்களும் அடித்தவர்கள் என்கிற பெருமை எந்த விதத்திலும் அவர்கள் ஆளுமை குறித்த அளவுகோல்களாக முடியாது. MRF சின்னம் பொறித்த மட்டையை அடுத்துப் பெறும் தகுதியுடையவர் என்று தற்போது ஆடும் எவரையும் இந்த அளவில் வைத்துப் பார்க்க முடியவில்லை.

ஸச்சின் 50 சதங்களைக் குறிவைக்கிறாரா என்ற பேச்செல்லாம் பரவலாகத் தொடங்கியிருக்கிறது. இன்னும் 17 வயதுக் காரராக லிட்டில் மாஸ்டராகத் தான் எல்லோர் கண்ணுக்கும் தெரிகிறார். அவருக்கும் வயதாகிறது! லாராவுக்கு ஆஸ்திரேலியாவில் பிரிவுபச்சாரம் செய்தாகிவிட்டது. எல்லா நல்ல விஷயங்களும் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பது எவ்வளவு வேதனையான, முகத்திலறையும் உண்மை!

நெவில் கார்டஸ் (Neville Cardus) போன்றோர் காதலுற்ற நுட்பங்களும், அருமைகளும் மறைந்து இரைச்சலும் காட்டடியுமே கிரிக்கெட்டின் எதிர்காலமாகிவிடுமோ என்கிற நிலையில் இன்னும் இவர்கள் ஆட்டத்தை எவ்வளவுகாலம் பார்க்க முடியுமோ! இவர்கள் வாழ்ந்த காலத்திலேயே வாழ்ந்தோம், இவர்கள் ஆட்டத்தில் உண்மையான மேதமையின் வெளிப்பாடுகளை நேரடியாய் உணர்ந்தோம் என்பவைகளே மீளும். நமக்குப் பின் வரும் சந்ததியினரிடம் நாம் கூறி மகிழவென்று சில அற்புத விஷயங்களைச் சேமித்து வைத்திருப்பது நல்லது தானே?

கருத்துகள்

SnackDragon இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றாக இருக்கிறது உங்கள் கட்டுரை. நன்றி.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி கார்த்திக்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க