முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோபச் சுழற்சி

மனத்திற்கு ஒப்புதலில்லாத நிகழ்வு ஒன்று கண்முன்னே நடக்கிறது. இந்நிகழ்வுகளை வருமுன் காக்க முடியாது - வாழ்க்கையும் அதன் நிகழ்வுகளும் எதிர்பாராத பல தருணங்களின் சேர்க்கை தானே. இந்நிகழ்வு மனத்திற்குச் சோர்வு தருவதுடன் தன் வயமின்றி நடக்கும் இவைகளைக் கட்டுப்படுத்த முடியாதது குறித்த ஒரு இயலாமை குடி கொள்கிறது.

இயலாமை கோபமாக வெளிப்படுகிறது. கோபம் அறிவுக்கு ஒரு கும்மாங்குத்து வைத்து, அதை மயக்கமடையச் செய்கிறது. தாற்காலிகமாய் மனத்தை அறிவு பிரிகிறது.

இந்நிலையில் கோபத்தின் பிடியில் மனத்திற்குப் பித்துப் பிடிக்கிறது. உள்மனத்தின் எல்லாச் சிறுமைகளையும் மீட்டு அது மனத்திரையில் காட்டுகிறது. அறிவின்றி ஏதேதோ அர்த்தமற்ற சூளுரைகளைச் செய்து, மீண்டும் இந்நிலைக்கு ஆளாவதில்லை என்று உறுதி கொள்வது போல் நடிக்கிறது. சிறுமைகள் எண்ணத்தில் வலம் வந்த பிறகு, அதன் காரணமாக எழும் சுய பரிதாபத்தில் மனம் அமிழ்கிறது. எல்லாத் தவறுகளையும் சாட்டின்றி ஒப்புக்கொள்வதுடன் 'இந்தச் சிறுமைகளின் வடிவமே நான்' என்று இறுமாப்புக் கொண்டு உறுதியடைவது போலவும் பாசாங்கு செய்கிறது. இப்படியான ஆட்டத்தில் மனச் சோர்வு உடற்சோர்வையும் உண்டாக்குகிறது.

அறிவு மெல்ல மயக்கம் தெளிந்து மனத்திடம் மீள்கிறது. மனது அமைதி கொண்டு நடந்ததை நிதானமாக எண்ணிப்பார்த்து, அதற்கு ஒரு வலைப் பதிவு வடிவம் தருகிறது. கை தட்டச்சி முடிக்கிறது.

மீண்டும் ஒரு/பல கட்டுப்படுத்த முடியாத நிகழ்வுக்காய்/நிகழ்வுகளுக்காய் காத்திருந்து தொடர்கிறது இருப்பு.

கருத்துகள்

NambikkaiRAMA இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான பதிவு! தொடருங்கள்!.
நானும் இப்போது என்பகுதியில் சுயமுன்னேற்ற தொடர் ஒன்று எழுத ஆரம்பித்துள்ளேன்.
இளங்கோ-டிசே இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன், இந்தப்பதிவை வாசித்தளவில் உங்கள் மனதுக்கு கனமான விடயம் ஒன்று நிகழ்ந்திருக்கின்றது என்பது புரிகிறது.
//மனது அமைதி கொண்டு நடந்ததை நிதானமாக எண்ணிப்பார்த்து, அதற்கு ஒரு வலைப் பதிவு வடிவம் தருகிறது.//
நீங்கள் அதிலிருந்து மீண்டு சற்று இயல்புக்கு வந்திருப்பதை வாசிக்கையில் நிம்மதி படர்கிறது.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி positiveRama.
// நானும்... //
(இது சுயமுன்னேற்றக் குறிப்பெல்லாம் இல்லை - ஒரு சுய புலம்பல் தான்)

//இப்போது என்பகுதியில் சுயமுன்னேற்ற தொடர் ஒன்று எழுத ஆரம்பித்துள்ளேன். //
நல்லது. படிக்கிறேன்.

டிசே, கனமானதொன்றும் இல்லையானாலும் பாதிப்பில் கனக்குறைவில்லை. உங்கள் நல்லெண்ணத்திற்கு நன்றி.
இரா. செல்வராசு (R.Selvaraj) இவ்வாறு கூறியுள்ளார்…
குரங்கே கோபமா?

:-) உங்களச் சொல்லலே :-)
Suresh இவ்வாறு கூறியுள்ளார்…
மன ஓட்டத்தை ஆழ்ந்து உற்று நோக்கி அதை இப்படி எழுத்தாக்குவது அவ்வளவு எளிதான ஒன்றல்ல...அது உங்களுக்கு நன்றாக சாத்தியமாக இருக்கிறது. என் குரு பாலகுமாரனின் நடையை உங்கள் எழுத்துக்களில் காண்கிறேன்.

வாழ்த்துக்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

கிச்சா பாறைகள்!

Screenshot from https://www.poetryfoundation.org/poems/42839/i-know-a-man பாண்டியில் படித்துக்கொண்டிருக்கும்போது (இது அந்தக்காலத்திற்கான இடுகுறிச் சொற்றொடர் - உண்மையில் ‘படித்த’ நினைவு இல்லை) ஒரு பின்னந்திப்பொழுதில் தெருத்தெருவாகச் சுற்றித்திரிந்தபோது கிச்சா, இதரர்களுடன் ஒரு கோவிலுக்குள் போன நினைவிருக்கிறது. மறுநாள் ம்யுபி என்ற மைக்ரோகபுராசஸர் இழவுத் தேர்வு இருந்தது பல்கலையில். கோவிலில் ஓ எஸ் தியாகராஜன் கச்சேரி என்று தட்டி வைத்திருந்தார்கள். ஓ எஸ் டி பின்னாட்களில்  கச்சேரி பண்ணுகிறேன் என்ற பெயரில் ஒப்பேத்தல் மன்னராக இருந்தாலும்  (இதைச் சொன்னதற்காக என்னை அடிக்க வராதீர்கள்) அருமையான பாடாந்தரம், வெண்கலக்குரல், களையான கச்சேரிகள், என்று 93ல் என் விருப்பத்திற்குரியவராகவே இருந்தார்.   நான் தட்டியைப்பார்த்துப் பரபரத்தேன். “ஓ எஸ் டி பாடறாரு மச்சான் - என்ன, எங்கன்னு விசாரிப்போம்”. இந்தவிடத்தில் கிச்சா அவனுடைய பாணியில் என்னைத் தடுத்தாட்கொண்டான்.  “ ஓ எஸ் தியாகராஜனையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம், நாம  இப்ப ம்யுபி தியாகராஜனை கவனிப்போம்”... (முதுநிலைப் படிப்பில் அந்த அர...