முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

துணைக்கண்டத்தின் கவாஸ்கர்கள்

தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனை செய்ய என்ன தகுதி இருக்க வேண்டும் என்று தெரியவில்லை. தெளிவான ஆங்கில உச்சரிப்பு, ஆட்டத்தின் நெளிவு-சுளிவுகள் தெரிந்திருத்தல், மற்றும் ஆட்டத்தைப் பற்றிய நடுநிலையான கருத்தை முன்வைக்கும் கண்ணியம் ஆகியன அடிப்படைத் தகுதிகள் என்று வைத்துக் கொள்ளலாமா? இதுபோக, கடந்த 10-15 ஆண்டுகளில் நடந்த கிரிக்கெட் போட்டிகள், அவற்றின் முக்கிய நிகழ்வுகள் என்று ஞாபகம் வைத்துக் கொள்வது விரும்பத்தக்கது. இத்தோடு கொஞ்சூண்டு நகைச்சுவை உணர்வு இருந்தால் எதேஷ்டம்.

பழைய ஆட்டக்காரர்கள் இதற்கு வருவது வழமையாகிவிட்ட ஒன்று. இதில் ரிச்சி பெனாட், டோனி க்ரேக், டீன் ஜோன்ஸ், ஹோல்டிங், டேவிட் கோவர் ஆகியோரின் வர்ணனை எனக்குப் பிடிக்கும். இந்தியத் துணைக்கண்டத்தில் இருப்பவர்களில், ரவி சாஸ்திரி, சிவராமகிருஷ்ணன் ஆகியோரின் வர்ணனைகள் நல்ல தரம் வாய்ந்தது என்று எனக்கு அபிப்பிராயம். மீதி சஞ்சய், மற்றும் கோஷ்டிகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. நவஜோத் சிங் சித்துவை இந்த விளையாட்டில் நான் சேர்த்துக் கொள்ள மாட்டேன்.

ஆனால், இந்த கவாஸ்கர், ரமீஸ் ராஜா, மற்றும் ரஞ்சித் ஃபெர்னாண்டோ ஆகியோரின் வர்ணனை இருக்கிறதே, இது தனி ரகம். மூவரும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள். வர்ணனையால் கிச்சுக்கிச்சு மூட்டுபவர்கள். இரண்டு அணிகள் ஆடினாலும், இவர்கள் தங்கள் அணியின் விளையாட்டையே சிலாகிப்பார்கள். தங்கள் அணி ஜெயிக்கும் நிலையிலிருந்தால் சந்தோஷமான வர்ணனை வரும். தோற்கும் நிலையில் இருந்தால், அணியில் இருப்பவர்களை ஆதியோடந்தமாகத் திட்டித் தீர்ப்பார்கள் - அணியின் பயிற்சியாளர், மேலாளர், அணியைத் தேர்ந்தெடுத்தவர்கள் என்று எல்லாரையும் சாடும் இவர்கள், எதிர் அணியின் ஆட்டத்தைப் பற்றி இரண்டொரு நல்ல வார்த்தை சொல்ல வேண்டும் என்ற தார்மிக பொறுப்பையும் மறப்பர்.

கவாஸ்கர் இந்த மாதிரி நம்மாட்கள் மேல் விழுந்து பிராண்டுவதைப் பார்க்கும் போது, இப்போது வாய் கிழியப் பேசும் இவர், அந்தக் காலத்தில் மட்டும் என்ன கிழித்தார் என்ற எண்ணம் வரவே செய்கிறது. இந்த மூவருமே, கொஞ்சம் அளுகுணிகள். அதிலும் கவாஸ்கர், நடுவர் நமக்கு எதிரான தீர்ப்பு கொடுத்தால், கய்யா முய்யாவென்று கதறுவார். இதற்குப் பிறகு நம்மாட்கள் சோதா மாதிரி தோற்றால் கேட்கவே வேண்டாம். இது போதாமல், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் ஆடும்போது, பந்துவீச்சாளர்கள் வாய்க்கு வந்தபடி மட்டையாளரைத் திட்டுவார்கள் (இதற்கு மட்டையாளர்கள் பெரும்பாலும் சுஜாதா சொல்கிறமாதிரி "ஞானம் பெற்ற புத்தர்கள்" மாதிரி நின்று கொண்டிருப்பர்) இதையெல்லாம் எதிர்த்து ஒரு வார்த்தை சொன்னால் அது மரியாதை - ஒரு காரியம் நமக்கு ஏற்புடையதல்ல என்று மற்றவர்களுக்குப் புரியவைக்க, ஆணித்தரமாக ஒரு முறை சொன்னாலே போதும். இவர் ரொம்பவும் அளுகுணி (whining) செய்வது சோர்வையே அளிக்கிறது.
நேற்று பாகிஸ்தான்-இலங்கை ஆட்டத்தில், யூசஃப் யுஹானா ரங்கன ஹெராத்தின் பந்தை நெம்பினார். அது ஹெராத்தின் வலப் பக்கமாய் வர,த்தைப் பிடிக்கத் தாவும் போது இந்தப்பக்கம் இருந்த ஷோயப் மாலிக் மீது மோதிக் கொண்டார். மோதவில்லையானாலும் பிடிக்கக் கொஞ்சம் கஷ்டமே. ரஞ்சித் உடனே சொன்னார், மாலிக் குறுக்கே வந்ததால் தான் பிடிக்க முடியவில்லை என்று. இன்னொரு பந்து, யுஹானாவின் மட்டையிலிருந்து, அவர் காலணியில் பட்டு எழும்ப முபாரக் அதைப் பிடித்தார். ஸ்டீவ் பக்னர் அவுட் கொடுக்கவில்லை. இதைப் பற்றி ரஞ்சித் புலம்பித் தள்ளினார். இத்தனைக்கும் இலங்கை 201 ஓட்ட வித்தியாசத்தில் ஜெயித்தது!

நகைச்சுவை உணர்வு பற்றிச் சொன்னேன். ரஞ்சித் ஃபெர்னாண்டோ, ரமீஸ் ஆகியோரின் ஆங்கிலமே இதைப் பறை சாற்றும். இரண்டு பேரும் உளறிக் கொட்டுவதில் மன்னர்கள். அதிலும் ரமீஸ் சமீப காலமாக ஒரு புதிய உச்சரிப்பைக் கையாளுகிறார் - இப்படி நிறைய உழைப்புள்ள காமெடி அது. அன்றைக்கு நம்மாட்கள் நன்றாக ஆடிக்கொண்டிருந்த சமயத்தில், யாரோ (வழக்கம் போல) ஆட்டமிழக்க, எதிரணியினர் சிரித்து அதைக் கொண்டாடினர். கவாஸ்கருக்கு இது பொறுக்கவில்லை - உடனே அவருக்கு வயது 12 க்கும் குறைந்து "சிரிங்க பா சிரிங்க, கடைசியில் சிரிக்க போறது யார்னு பார்ப்போம்" என்று எதிரணிக்கு அறைகூவல் விட்டார். (கடைசியில் நாம் தான் சிரித்தோம்) அன்று டெண்டுல்கர் வழக்கமாக ஆடும் நேர் விளாசல் (ஸ்ரெய்ட் றைவ்) ஆடினார். கவாஸ்கர் "இந்த மாதிரி அடிகளுக்கு மும்பையில் நாங்கள் என்ன சொல்வோம் தெரியுமா?" என்று கேட்டு, "ஒஹொஹொஹொஹொஹோஓஓஓ..." என்று ஆதிவாசி மாதிரி ஓலமெழுப்பினார். ஸ்டீவ் வா பந்தை வெட்டி வெட்டி ஆடும் போதும், அந்தப் பாகிஸ்தான் பொடியன் இம்ரான் நஸிர் அனாயாசமாகச் சுழற்றி அடிக்கும் போதும், மும்பையில் அதற்கெல்லாம் சரியான சொற் பிரயோகங்கள் கண்டுபிடிக்கப்படவில்லையாதலால் அமைதி காப்பார். யார் செய்த செலவு என்று தெரியவில்லை, கவாஸ்கரை சரத்தேச கிரிக்கெட் கவுன்சிலின் "டெக்னிகல்" ஆலோசகராகப் போட்டது. இதையும் குறித்துப் பீற்றிக் கொண்டார்.

நேற்று இலங்கை பாகிஸ்தான் ஆட்டத்தில், ரமீஸும் ஃபெர்னாண்டோவும் ஜோடி சேர்ந்து நம்மைக் குதூகலப் படுத்தினார்கள். அப்போது யோசித்தேன், கவாஸ்கரையும் சேர்த்து இந்த மூவரின் உத்திகளில் உள்ள ஒற்றுமையைப் பற்றி.ரமீஸுக்கும், ஃபெர்னாண்டோவுக்கும் பாகிஸ்தான், மற்றும் இலங்கையின் கவாஸ்கர் என்ற பட்டத்தைக் கொடுக்கலாம் - மேற்சொன்ன குணங்களில் கவாஸ்கருக்கே அவை நிறைந்து இருப்பதால்...

கவாஸ்கர் அந்நாளில் நாட்கணக்கில் ஆடுகளத்தை ஆக்கிரமித்துக் கொண்டு, கட்டை போட்டு சதமடித்தாலும், சர்வதேச அளவில் (பிராட்மென் சாதனையை முதன் முதலில் முறியடித்து) நம் நாட்டிற்கு பெருமை தேடித் தந்தவர் என்ற மதிப்பு உள்ளது. அதையெல்லாம் இவர் பேசியே கெடுத்துக் கொள்வார் என்று பயமாக இருக்கிறது. இப்போது சிறப்பு ஆலோசகராக இந்திய அணியில் உள்ளார் - வர்ணனைப் பெட்டியில் சொன்னதையெல்லாம் அணிப் பயிற்சியின் போது சொல்லி, அணிக்கு பலம் சேர்த்தால் போதும். வர்ணனையை, அதைச் சிறப்பாய்ச் செய்பவர்களுக்கு விட்டு விடலாம்.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Kannan,
Very interesting to read. Superb sense of humour.
niinggaL Bayanggara cricket Arvalar ena ninaikkiReen!!
என்றென்றும் அன்புடன்
பாலா
Indianstockpickr இவ்வாறு கூறியுள்ளார்…
கண்ணன்,

நல்ல பதிவு. ஆனாலும் நம்ம கவாஸ்கரை ரொம்பத்தான் வாருரீங்க. நடுநிலை வர்ணனையாளர்களை இந்த காலத்தில் கண்பது அரிது. இதில் கைதேர்ந்தவர்கள் ஆஸ்திரேலிய channel 9 வர்ணனை டீம்: டொனி க்ரேக், மார்க் டைலர், மற்றும் இயன் ஹீலி :2003 இந்திய பயணத்தின் போது இவர்கள் புலம்பித்தள்ளியது கேட்க தேனாக இருந்தாலும், அவர்களின் one sided views கொஞ்சம் ஓவராகவே இருந்தது. இங்கிலாந்து sky tv/channel 4 வர்ணனையும் இந்த வகையே. முக்கியமாக இயன் போதம். 2002 இந்தியா-இங்கிலாந்து தொடரில் கவாஸ்கர் நேர்த்தியாக இவர்களை தாக்குபிடித்தார்! இந்த லிச்ட்'ல் இம்ரான் கான், வாசிம் அக்ரம் இருவரையும் நிச்சியமாக சேர்க்கலாம்.

ஒரளவுக்கு (கவனிக்கவும்:ஒரளவுக்கு) நடுநிலை வர்ணனையாளர்களாக நான் கருதுவது ரவி சாஸ்திரி, சிவா, பாப் வில்லிஸ், மைக்கேல் ஹோல்டிங், பால் அல்லாட், ரிச்சி பெனாட், டீன் ஜோன்ஸ், மைக்கேல் ஸ்லேட்டர், ஹென்ரி ப்லோபீல்ட், டேவிட் கோவர், இயன் பிஷப் போன்றோர்.

தன் சொந்த நாட்டின்மீது இவர்களுக்கு இருக்கும் ஒரு soft corner'ஐ கொஞ்சம் மன்னிப்போமாக!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...