முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஊர் விசேஷங்கள்...

எச்சரிக்கை (அல்லது) பொருள்: ரொம்ப நாள் கழித்து ஊருக்குப் போனேன். நான் கண்ட மாற்றங்கள், ஊர் சுற்றியதன் பதிவுகள்...

பத்து வருடத்தில் ஊர் மாறிப் போயிருந்தது. செட்டிப்பாளையம் ரோடு - இதன் முடிவில்லா ஓட்டத்தின் மறுபக்கத்தில், தொடுவானத்திற்கப்புறம் இருந்த செட்டிப்பாளையம் வரை ஒரு குஞ்சு குளுவாணி காணாது அப்போது. வயல்களும், முட்புதர்களும், தென்னந்தோப்பும், வெறுமையும் மேடும் பள்ளமுமான அகன்ற நிலப்பரப்பு முழுதும் வியாபித்திருக்கும். நீண்டு வளரும் ஆளற்ற சாலையில் தூரே தெரியும் வீடு, மற்றும் ஒட்டிய தென்னந்தோப்பு -நான் மூன்றாம் வகுப்பில் படித்த தமிழ்க் கதையில் வரும் ஏழைக் குடியானவன் இந்த வீட்டில் தான் வசிப்பான் என்று தீர்மானம் பண்ணிக் கொண்டேன். நண்பர்களை வீட்டுக்கு அழைத்தால் அவர்களை ஒரு நடை இந்தச் சாலையில் 'அடித்துப் பிடுங்கும்' பாலம் வரையில் அழைத்துச் சென்று, அங்கே உட்கார்ந்து தூரே தெரியும் கோவையின் கட்டிடங்களை இனம் காணத் தலைப்படுவோம். அருமையான, சில சமயம் பலமான காற்று எப்போதும் இருக்கும். இதுவே எங்களூரின் சுற்றுலாத் தன்மை மிக்க அம்சம். இப்போது சாலை நெடுகிலும் அடையாளம் தெரியாத அளவிற்கு வீடுகள், கடைகள், ஜெபக்கூடங்கள், சமத்துவபுரம், இன்ன பிற.

முன்பு குடியிருந்த வீட்டுப் பக்கம் போனேன். தார் ரோடுகள், தெருப்பெயர்ப் பலகைகள் மேலும் மேலும் வீடுகள் என்று கொஞ்சம் தொலைந்து போனேன். பழக்கப்பட்ட பன்றி மேயும் மைதானத்தின் மணம் மாறாதிருந்ததில் கோ-ஆர்டினேட்ஸ் திரும்பக் கிடைக்கப் பெற்றேன். மற்றபடி ஒரு நாளைக்கு ஒரே தடவை வரும் பொள்ளாச்சி பேஸஞ்சர், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், ராமேச்வரம் எக்ஸ்பிரஸ் என்ற நிலை போய், மணிக்கொரு மதுரை இண்டர் சிடி. ரவி ரேடியோ ரிப்பேர் இருந்த இடத்தில் டிஷ்நெட் ஹப் வைத்து ஹைஸ்பீட் இன்ட்ர்நெட் பிரவுசிங். சிங்கப்பூர், பாம்பே சலூன்கள் இடம் பெயரவில்லை. மீன்கடை சந்தில் பல புதிய 'நகர்' கள். பழைய ரேஷன் கடையைக் காணவில்லை, ஸ்டேட் பாங்க் ஏடிஎம் வந்திருக்கிறது. ஆல்வின் ஜோசப் அண்ணாச்சி கடை டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர் ஆகியிருந்தது, கிரெடிட் கார்ட் வசதியுடன். (தம்மண்ணன் மளிகை மாறவில்லையாம்) கிரிக்கெட் விளையாடிப் பழகிய சர்ச் கிரவுண்ட் பக்கம் நடந்து போனேன் - தொலைந்த பந்தைத் தேட வந்து கள்ளிப் பழம் சாப்பிட்ட இடத்தில் ஏதோ ரெயில்வே ஆடிட்டோரியம், பளிச்சென்று. அந்தப் பக்கம் கம்பியூட்டரைஸ்ட் ரெயில்வே ரிஸர்வேஷன் மையம் ஒன்று புதிதாக.

எங்கள் காம்பவுண்ட் மளிகைக் கடை நாயுடு கடையை ஏரைகட்டிவிட்டுப் பக்கத்தில் புதுவீடு கட்டிக் கொண்டு மகனுடன் வசிக்கிறார். புளிய மரத்தடியில் என் தம்பிகளுடன் மூக்கொழுக மண்ணில் புரண்டு விளையாடிய அன்னபூரணிக்குக் கல்யாணம் ஆகி சாயிபாபா காலனியில் செட்டில் ஆகிவிட்டாள். புளியமரத்தை வெட்டிவிட்டு, அங்கே ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் வர உள்ளது. 55A பஸ் கண்டக்டர் பையன் இப்போது ஆளாகிவிட்டார் - நரை முடியெல்லாம் வந்திருக்கிறது. யாருக்கும் அடையாளம் தெரியாமல், மாறுவேடம் போடாமலே நான் incognito வாக ஊரை வலம் வந்தேன்!

இதுதான் போத்தனூர் விசேடம்...

கருத்துகள்

Kasi Arumugam இவ்வாறு கூறியுள்ளார்…
என்னமோ பத்து வருஷம் கழிச்சுப் போனமாதிரி பில்டப் பண்ணின மாதிரி இருக்கு. எல்லாம் சாதாரண வளர்ச்சிதானெ கண்ணா?
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
காசிலிங்கம் சார்,

ஊரை விட்டு வந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆச்சு. நடுவில் அப்பப்போ flying visits அல்லாமல் இப்படி நடந்து ஊர் சுற்றவில்லை. அது இப்பொ தான் முடிஞ்சது. ஏனோ இந்த வாட்டி ரொம்ப nostalgic ஆ போயிடுச்சு...

மற்றபடி 'பில்டப்' தான் :-))
enRenRum-anbudan.BALA இவ்வாறு கூறியுள்ளார்…
Even if it is a "Buildup", படிக்க நல்லாயிருந்தது! நானும் 4 வருடம் (GCT-இல் படிக்கச்சே தான்!) கோயமுத்தூர்லே குப்பை கொட்டியிருக்கேன். என் Blog-இல் GCT visit (after 17 years) பற்றி எழுதியிருக்கேன்! படிச்சுட்டு பின்னூட்டமிடுங்க!
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
Balaganesan,

Thanks for your comments!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...