முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆரம்பமே இப்பத்தான்னு நெனப்போம்...

கணினியுடன் இப்போதெல்லாம் ரொம்ப சிநேகம் பாராட்டுகிறேன். கை தோள்ப்பட்டையில் இருந்து பிய்ந்து தொங்கும் அளவுக்கு RSI வளர்த்துள்ளேன். இருக்கையில் கவிழ்ந்தும், நிமிர்ந்தும், பக்கவாட்டில் அமர்ந்தும், கால்களை மடக்கி வைத்தும் மேசைமேல் நீட்டியும், தட்டச்சானை மடியிலும் (மாரிலும், தோளிலும்),பலகை மீது வைத்தும், பற்பல கோணங்களில் இருந்தும் ஒன்பது வருடங்களில், பல மென்பொருள் கிரந்தங்களும், கட்டளைத்தொடர் புனைவுகளும், மின்னஞ்சல் மடல்களுமாக அடித்துத் தள்ளியிருக்கிறேன். இதுபோதாதென்று வலைமேய்தல் காரணமாகவும் mouse ஐ (இதற்குத் தமிழில் என்ன 'எலி'யா?) click ஓ click என்று க்ளிக்கியும் இருக்கிறேன். (முழங்கையில் நமைச்சலும், விரல் எலும்புகளின் வலியும் பலமிழப்பும், நுனிகளில் எரிச்சலும், பின்னந்தோளில் குத்தல் போன்ற வலியும் இருந்தால் ஒரு நவீன ortho விற்பன்னரிடம் காட்டித் தகுந்த சிகிச்சை மேற்கொள்ளவும்)


இருந்தும், தமிழில் தட்டச்சுவதைத் (இப்போதெல்லாம் பழைய காலம் மாதிரி யாராவது 'எழுது'கிறார்களா?) தவிர்க்க இயலவில்லை. தமிழ் தட்டச்சுதலும், படித்தலும் நன்றாய் தான் உள்ளது. மட்டுமல்லாமல், உணர்ச்சியற்ற இந்த இயந்திரங்களுடன் என் வாழ்க்கையில் ஒரே முறை வரும் இளமை முழுவதையும் செலவழித்துவிட்டு நிற்கிறேன் - மென்மையான உணர்வுகள் மரத்து, ரசனை மங்கியிருக்கும் நிலையில், என் கணினி தமிழ் கற்றுக் கொண்டு, நான் தொலைத்ததை மீட்டுக் கொடுப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. இதனாற்றான் (நல்லா எலக்கணமாதான் இருக்கு... உக்கும்...) இதுநாள் வரை அந்நியமாய்த் தெரிந்த என் கணினியும் இப்போது என்னிடம் தோழமை பாராட்டுவது போலத் தெரிகிறது. இதை நான் வெளியில் எங்காவது பார்த்தால், இனி நிச்சயம் ஒரு பரிச்சியப் புன்னகைப்பேன்.

இது நிற்க.

வலைப்பதிவு புதிதாய் ஆரம்பிப்போர்க்குக் கட்டளைகள், அங்கு எழுதக் கூடியது, கூடாதது, அதன் வடிவம், உட்பொருள், மற்ற வலைஞர்கள் கையாளும் நடை, உத்தி, மற்ற சம்பிரதாயங்கள் குறித்து வலையில் மேய்ந்து தெரிந்து கொண்டேன். அதில் எனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு, தேவையில்லாததை உடன் மறந்துவிட்டேன். இங்கு எனக்குத் தோன்றுவதை எழுதுவது என்று தீர்மானித்திருக்கிறேன். எழுதும் பொருள் எப்படியானாலும், இப்போதைக்கு தினமும் ஏதாவது எழுதினால் அதுவே போதும் என்றும் இருக்கிறேன். தமிழில் ஏறக்குறைய எல்லோருடைய வலைப்பதிவுகளுக்கும் ஒரு trip அடித்துவிட்டேன். (அதில் எனக்குப் பிடித்த பதிவுகளில் சில வலைச்சுட்டிகளை, இடது பத்தியில் இடலாம் என்றிருக்கிறேன்) சீனியர்களான அவர்கள்களுக்கெல்லாம் ஒரு அரைமண்டி நமஸ்காரம் போட்டு ஆரம்பிக்கிறேன்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள...

பிம்பச்சிறைகளும் சிதைவும்

யாரையும் உடனே ஒரு வகைப்படுத்தாவிட்டால் நமக்கு நிம்மதி போய்விடுகிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒரு குழுவைச் சார்ந்திருக்கவேண்டும் என்பதும், அவற்றிற்கான வெளிப்படையான அடையாளங்களை நாம் இனங்கண்டுகொள்ள முடியும் என்பதும், நாம் அவர்களைப்பற்றியவொரு அடிப்படை எடை போடுவதற்கான தளத்தை அமைத்துக் கொடுக்கிறது. இதற்கப்புறம் அவர்களின் செயல்களையும், பேச்சுக்களையும் இந்த நியாயத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறோம். எல்லோரையும் நாம் அவர்களுகென்று உருவாக்குகிறவொரு பிம்பச்சிறைக்குள் அடைத்துவிட்டுத் தான் நிம்மதியடைகிறோம். ஒரு சிலருக்கு அமைப்பின் பால் உள்ள, அமைப்பு சார்ந்த விழுமியங்களின் பால் உள்ள சார்பு அவர்களின் தனித்தன்மைக்குக் கேடு இல்லாத வகையில் இருக்கிறது. அவர்கள் பல விஷயங்களில் தனித்தன்மையோடு இயங்குவதால் அமைப்புக்கு எதிரான போராளிகள் போன்ற சித்தரிப்பு நமக்கு உருவாகிறது. மேலும் எந்தச் சார்பும் இல்லாது வாழ அவர்களுக்கு எங்கிருந்து conviction வருகிறது? எப்படிப் பாதுகாப்பாக உணர்கின்றனர் என்ற கேள்விகளும் எழுகிறது. நம் அறிவுக்குப் புலப்பட்ட எந்த பிம்பட்டெம்பிளேட்டுகளுக்கும் சிக்காதவர்களை ஐயத்துடனும், பயத்துடனும் பார...

புவிவரைபடங்கள்

  மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை.   எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப்  இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள்  - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை  ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும்  குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும்   அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை  நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! -  உருவ  ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ,  பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ  போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும்   அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட  தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...