முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அழகாயிருப்பது

உலகின் புகழ்பெற்ற படைப்பாளிகள் சிலரின் தினசரி ஒழுங்குகளை இங்கே கொடுத்திருக்கிறார்கள். நானும் இம்மாதிரி ஏதாவதொன்று ஆக ஆசைப்படுவதால் ஆர்வத்துடன் படித்தேன். இதிலே எல்லாவற்றையும் விட என் கவனத்தைக் கவர்ந்தது விக்டர் ஹியுகோவின், தினசரி முடிதிருத்துபவரிடம் போகும் வழக்கம்.

கடந்த இரண்டாண்டுகளில் முடி வெட்டிக்கொள்ளப் போனால் ஒன்று, இரண்டு என்று மண்டையைக் காட்டி இலக்கம் சொல்வது பழகியிருந்தது. இயந்திரத்தில் அந்த இலக்கத்துக்கேற்ற வில்லையைப் போட்டு மழித்தால் பத்து நிமிடங்களில் வேலை முடியும். உபரியாகப் பல வசதிகளும்: இரண்டு மாதங்களுக்கு முடிவெட்டிக்கொள்ள வேண்டியதில்லை;  தூங்கியெழுந்தவுடன் பரட்டைத் தலையை ஒழுங்கு செய்ய நேரம் எடுத்துக் கொள்ளாமல் காற்சட்டையை இழுத்து மாட்டிக்கொண்டு உடனே பால் வாங்கவோ, மகளைப் பள்ளிக்கூடத்தில் விடவோ ஓடலாம்; பயணங்களில் சீப்பு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டியதில்லை; கண்ணாடி பார்க்க வேண்டாம்; இரவுப்பயணங்களில் தூக்கத்துக்கு நடுவே தலையைக் கோதி சரிசெய்ய வேண்டாம்; இப்படிப் பல...

இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் வீட்டிலே இதற்கு பலத்த எதிர்ப்பு உண்டு. ("ஏன் இப்படிக் கரண்டீட்டு வர்ற? பாக்க சகிக்கல", தொடங்கிய கண்டனங்கள்)

ஆனால்  முடியை எனக்குத் தேவையான அளவு 'வெட்ட' வைப்பது இன்னும் கடினமாக இருந்தது. "இதுக்கு மேல வெட்னா நட்டுகிட்டு நின்னுக்கும்" என்று தொடங்கும் அறிவுரைகள். எப்படிச் சொல்லிக்கொடுத்து வெட்டச் சொன்னாலும் எனக்கு மகிழ்ச்சி தரும் வகையில் யாரும் முடியைக் 'குறைத்த'தில்லை. பக்கவாட்டில் குறைத்து உச்சந்தலையில் தேன்கூடு மாதிரி முடியிருக்கும்படிச் செய்துவிடுவார்கள். வீட்டுக்கு வந்தால் "இதுக்கா இவ்வளவு நேரம்? ஒரு வாரத்துல மறுபடியும் காடு மாதிரி வளரப்போகுது" என்று பின்னூட்டம் கிடைக்கும். 

இம்முறை முடிவெட்டிக்கொள்ளும்போது    'கரண்ட' வேண்டாம் என்று ஆனமட்டும் முடியை வெட்டிக் குறைக்கச் சொன்னேன். இந்தி மட்டுமே தெரிந்த இளைஞன் ஒருவன் வெட்டிவிட்டான். அவனுக்குப் பலமுறை சொல்லியும் அரைமணி நேரம் தலையின் மேற்பகுதியில் நுனிமுடியையே வெட்டியிருந்தான். கோபம் வந்தாலும் திடீரென்று விக்டர் ஹியுகோவின் நினைவு வந்தது.  அவர் தினமும் முடியைத் திருத்திக் கொண்டு தன் தலைமயிரையும் முகத்தையும் என்றும் சீராக வைத்திருக்க விழைபவர் என்று புரிந்துகொண்டேன்.  'முடி இறக்கும் இடம்' என்றோ 'இங்கே மொட்டையடிக்கப்படும்' என்றோ இல்லாமல் (அன்றைக்கு) ரஜினி, கமல் படங்களைப் போட்டு 'முடி திருத்தும் நிலையம்' என்றும் 'ஆண்கள் அழகு நிலையம்' என்றும் தட்டி வைத்திருப்பதன் பொருள் எனக்கு காலம் கடந்து விளங்கியது.

தன்னை அழகாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற விழைவு ஆரோக்கிய மனநிலையின் அறிகுறி என்று எங்கோ படித்திருக்கிறேன். நடிகர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்களிடம் ஊடாடும்போது ஒருபோலவே தம்மைக் காட்டிக் கொள்கிறார்கள். பரட்டை / மொட்டைத் தலையும், நான்குநாள் தாடி / எச்சில் ஒழுகும் வாயோடு யாரும் காட்சிதருவதில்லை. இவர்கள் மட்டுமல்லாமல் பலருக்கும் இந்தப் பழக்கமும் ஒழுங்கும் இருக்கின்றன.

இதையும் நினைத்துப் பார்த்து நேர்த்தியாக என்னை எப்போதும் காட்டிக்கொள்ளும் விழைவு எனக்கில்லையோ என்று யோசித்தேன். இருக்கிறது, ஆனால் விக்டர் ஹியுகோ போலவல்லாமல் நான் இதற்குக் குறைந்தபட்ச முயற்சியும் எடுப்பதில்லை.

அது ஏனென்று யோசிக்கையில் முதலில் நினைவுக்கு வருவது கலைமணி. சிறுவயதில் என்னை முடிவெட்டிக்கொள்ள இங்குதான் அனுப்புவார்கள். எப்போது போனாலும் (அம்மா கேட்டுக்கொண்டபடி) பயங்கர 'சம்மர் கட்' (வானிலை எப்படியிருந்தாலும்) அடித்து உரித்த கோழி மாதிரி என்னை ஆக்கிவிடுவதில் கலைமணியின் பெயரில் இருக்கும் 'கலை'யைப் பற்றி வெகுநாட்கள் நான் யோசிக்கவில்லை. (அவர் பிற்காலத்தில் கலைமணி சலூனை மூடிவிட்டு இறைச்சிக்கடை நடத்தினார் என்று தெரிந்ததும் அவரை நினைத்து மகிழ்ச்சி கொண்டேன்)

முடி வெட்டுவதன் நோக்கம் கொடுக்கும் காசுக்கு அதிகபட்ச சேவையைப் பெறுவது; குறைந்தது ஒரு மாதத்துக்கேனும் மறுபடி வெட்டவேண்டிய தேவையில்லாமல் இருப்பது. இதுவே என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும். பதின் வயதுகளிலும், இருபதுகளிலும் மிகவும் மெலிந்த உடல்வாகு கொண்டிருந்ததில் தாழ்வு மனப்பான்மையிருந்தது. என் வயதொத்தவர்கள் உடுத்திய உடைகள் பலவும் எனக்குப் பொருந்தா. மடித்துவிட்ட முழுக்கைச் சட்டையை காற்சட்டைக்கு வெளியே இழுத்துவிட்டு உடுத்தியபடிதான் ஐந்தாண்டுக் கல்லூரிப் படிப்பு கழிந்தது. அழகுபடுத்திக்கொள்வதில் அக்கறையற்றவனாக என்னைக் காட்டிக் கொள்ள முயன்று அதுவே பழக்கமும் ஆகிவிட்டது. ஒரு வேளை இதனால்தான் முடி 'குறைக்காத்தில்' எனக்குக் கோபம் வருகிறதோ என்று எண்ணிக்கொண்டேன்.

விக்டர் ஹியுகோவின் இளமைக்காலம் எப்படியிருந்திருக்கும் என்று தெரியாது. ஆனால் முடிவெட்டிக்கொண்ட பின்னால் வீட்டிற்கு வந்து உடனே குளிக்கவேண்டும் என்பது உட்பட சலூனுக்குப் போவதற்கு நிபந்தனைகளோ கட்டாயமோ இருக்கவில்லை என்பது எனக்குப் பெருவியப்பு.

முடி வெட்டி முடிந்ததற்கான அறிகுறியாய் என்னைத் தூசுதட்டி ஒரு கண்ணாடியை எனக்குப் பின்புறமாக வைத்துக் காட்டினான். புதிதாய் என்னைப் பார்த்துக் கொண்டேன். அளவாக முடியை வெட்டியதில் தலை அடக்கமாகவே தெரிந்தது. இனி (மீதமிருக்கும்) முடியை ஒழுங்கு மாறாமல் திருத்திகொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். பரட்டைத் தலையோடு என்னைப் பார்க்க நேர்ந்தால் ஏனென்று கேளுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க