முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோபாலி...

தமிழ் எழுத்தாளர்களில், இசையை அறிந்து, அதை எழுத்தோடு கலந்து (சில சமயம் நாம் ரசிப்பது இசையா தமிழா என்று இனம் கண்டுபிடிக்க முடியாமல் போவது உண்டு), அல்லது இசையைக் கதைக் களனாகக் கொண்டு, அல்லது சொல்வது எதுவானாலும், இசை சம்பந்தமான ஒரு காட்சியை இணைப்பது என்று செய்பவர் பலர். நான் படித்ததில் கல்கி, தி.ஜா போன்றோர் இதை மிகவும் அனுபவித்துச் செய்வதாக எனக்குத் தோன்றுவதுண்டு.

இந்த அனுபவத்தைக் கொடுப்பவர்களில் தி.ஜானகிராமனைத் தான் நான் முதன்மையாகக் குறிப்பிடுவேன். அவரின் சில வரிகளைக் கூர்ந்து படித்தால் ஒரு தம்புரா ஒலியின் ரம்மியம் நம்மைச் சூழ்வது போல் இருக்கும். அவர் வருணிக்கும் தஞ்சை, கும்பகோணமும், காவிரியும், சங்கீத மணமும், கதைமாந்தரும் (அந்த வசீகரமான, வலிமையான பெண் கதாபாத்திரங்களும்) என்னை வேறு உலகிற்கு இட்டுச் செல்லும். அந்த மாதிரியான அனுபவம் ஒன்று எனக்கு மரப்பசு படிக்கும்போது ஏற்பட்டது. பாம்பின் கால் பாம்பறியும் என்பப்போல, தி. ஜா என்ற கலைஞன் கோபாலி என்ற கலைஞனின் உள்ளத்து உணர்ச்சிகளை உணர்ந்து, அந்தப் பாத்திரமேற்று, உள்திறந்து காட்டுவபோல் எனக்குப் பட்டது. "ஆகா", என்று தன்னை மறந்து ஒரு வார்த்தை வாயில் வருகிறது. Without further ado, the passages from மரப்பசு.

கோபாலி பற்றி அம்மணி சொல்வது...
"...தள்ளி உட்கார்ந்து நிமிர்ந்து பார்த்தேன். அந்த அசட்டு அணைப்பு அணைத்த உடம்பும் கண்ணும் இல்லை. மேடை மேடையாகத்தெரிந்தது. கண்முன் இருப்பவர்களை அழித்துவிட்டு அது பாடுகிற லயிப்பு, சிம்மம் மாதிரி சபையை ஆள்கிற தோரணை - சபையைப் பார்க்காமல், தன் உள்ளே பார்த்துக் கொண்டு, சபையை ஆட்டி வைக்கிற தன்னறியாமை. ஒரு தடவை கச்சேரியில் பின்னால் யாரோ பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு, இரண்டு மூன்று தடவை திரும்பிப் பார்த்தது அது - சுட்டெரிக்கிற ரௌத்ரம் கண்ணில். சற்று அடங்கிய குசுகுசுப்பு மீண்டும் பேச்சாக உயர்ந்ததும், திரும்பி "நான் இன்னிக்குப் பாடட்டுமா, வாண்டாமா?"என்று ஒரு கேள்வியாக வெடித்து, பாதிப்பாட்டை அவசர அவசரமாகப் பாடி முடித்து, "பவமான"என்று மங்களம் பாடி முடித்துவிட்டது. கச்சேரி தொடங்கி அரைமணி கூட ஆகவில்லை.கண்டுவைப் பார்த்து அஞ்சலியுடன் "பெரியவா பொறுத்துக்கணும் பின்னாலெ ரொம்பப் பெரிய வாயா ஆயிடுத்து, முடிச்சுட்டேன். எனக்கும் வருத்தம் தான்"என்று மன்னிப்புக் கோரிவிட்டு, மறுநாள் காலையில் அதே பக்க வாத்யத்துடன் கண்டுவின் வீட்டுக் கூடத்தில் பூஜை அலமாரிக்கு முன் உட்கார்ந்து பாடத் தொடங்கி, உச்சிவேளை வரையில் பாடி தன்னையே கரைத்துக் கொண்டுவிட்டது..."

இனி கோபாலியே இதுபற்றிச் சொல்வது...
"...நன்னா ஞாபகமிருக்கு எனக்கு. யாரோ பின்னாலெ பேசிண்டிருந்தான்னு கோபம் வந்ததுன்னா கச்சேரியை முடிக்கலாமோ? மகா அபச்சாரம்.ராத்திரி ஒரு மணியாச்சு, ரண்டு மணியாச்சு தூக்கம் வல்லெ. பகவானுக்காகப் பாடறபோது இது என்ன அகம்பாவம்?யார் கேட்டா என்ன, கேக்காட்டா என்ன? ராத்திரி ரண்டு மணி இருக்கும் எழுந்துண்டு கண்டுவாத்திலே போய்க் கதவை இடிச்சேன். எழுந்து ஜன்னல் வழியா 'யாரு'ன்னார். நான் தான்னேன். பரபரன்னு வந்து கதவைத் திறந்தார். கால்லெ விழுந்து நமஸ்காரம் பண்ணினேன். காலமே கச்சேரி பண்ணப் போறேன் பெரியவா அனுமதி கொடுக்கணும்னு நின்னேன். இதுக்காகவான்னு உபசாரமா ஏதோ சொல்ல ஆரமிச்சார். சரி தூக்கத்தைக் கெடுத்துட்டேன், நாளை பேசிக்கலாம்னு வந்துட்டேன். மறுநாள் விடியகாலமே குளிச்சு என்னை ஒழிடா கிருஷ்ணான்னு வேண்டிண்டு வந்து பாட உட்கார்ந்துண்டேன். அன்னிக்கு தேவகாந்தாரி பாடி மோகனம் பாடி - எவன் பாட முடியும்? நான் பாடலெ, அதுக்குச் சொல்றேன்.ராகங்கள்ளாம் அதுகளாப் பாடிண்டுது. என்னைப் போட்டு மிதிச்சுண்டு அதுகளாப் பாடிண்டுது. இல்லாட்டா எந்தப் பய அப்படிப் பாட முடியும்? இவன்தான் பாட முடியுமா? கூடம், ரேழி, கொல்லைக்கட்டு, சமையல்கட்டு, முத்தம் - எல்லாம் தலையாத் தெரிஞ்சுது.கண்ணைக் கண்ணை மூடிக்க வேண்டியிருந்தது ...மத்தியானம் ஒரு மணி ஆச்சு களைப்பு சளைப்பு இல்லே - "ஆஹா ஆஹான்னு கூடம் முழுவதும் பித்துப் பிடிச்சு அரடித்து. அன்னிக்கு அந்த தேவகாந்தரி பாடினப்புறம் பிடில் வாசிச்சுதே கோபு- வாசிக்கணுமே - பிழிஞ்சு பிழிஞ்சு அழுதது.'கோபாலி, சாட்சாத் கோபாலண்டா நீ. நான் வாசிக்க மாட்டேன். என்னை ஔமானப் படுத்தாதே'ன்னு ஜரிகை அங்கவஸ்திரத்தாலே கண்ணைத் துடச்சுண்டது.அதுக்கு என்னைச் சொல்றதாக எண்ணம். அது சொன்னதுதான் நிஜம்.கோபாலன் தான் பாடினான் - "

"ஆ! அசத்தறியேடா மச்சி" என்று வாய்விட்டரற்றினேன். இதைப் படிக்கும்போதெல்லாம், ரேழி முழுக்கத் தெரிந்த தலைகளில் ஒன்று என்னுடையதாக இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து மருகுவேன். இந்தப் பகுதியை முதலில் படித்தவுடன் ஏதோவொரு வினோத உணர்ச்சி மிகுதியால் ஆட்கொள்ளப் பட்டேன். ஒவ்வொரு முறையும் ஆட்கொள்ளப்படுகிறேன். 'உண்மையான கலைஞன் தன்னை வெளிப்படுத்துவது இப்படித்தானோ?' என்று கோபாலியையும், இந்தப் பகுதியை ஒரு tranceல் இருந்தது போல எழுதிய தி ஜா வையும் பார்த்து நினைத்துக் கொள்ளுகிறேன்.

உங்களுக்கு ஏதாவது தோன்றுகிறதா?

கருத்துகள்

Santhosh Guru இவ்வாறு கூறியுள்ளார்…
முழுமையான காண்டெக்ஸ்டில் படிக்காததாலோ என்னவோ, எனக்கு இந்த பத்திகள் கொஞ்சம் weird உணர்வினை அளிக்கிறது. சரியாக சொன்னால் முழுமையாக புரியவில்லை. இந்த நாவலைப் படித்தால் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை உணரமுடியும் என எண்ணுகிறேன்.

தி.ஜா எழுத்துக்கள் மீது (மோகமுள் தவிர அம்மா வந்தாள் மற்றும் மரப்பசு) சில காலமாக ஒரு புதுவிதமான ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. அவருடைய ரசிகர்கள் அவருடைய எழுத்து பற்றி பேசும் போது, அந்த அனுபவத்தினை பகிர நினைக்கும் போது, (அவருடைய எந்த எழுத்துக்களையும் படிக்காத எனக்கு) அக்கார அடிசலின் சுவையினை வார்த்தையில் சொல்வது போல எனக்கு சம்பந்தமில்லாமல் தோன்றும்.

அதைப் போலவே தி.ஜா பற்றிய வெங்கட் சாமிநாதனின் ஒரு கட்டுரை படித்த பின்பு, அவருடைய ஜப்பான் பயண நூலான உதயசூரியன் மேலும் ஒரு ஈர்ப்பு வந்துள்ளது.

ஆர்வமெல்லாம் நிறையாத்தான் இருக்கு. கூடவே சோம்பேறித்தனமும் அதிகமாக இருக்கு, நேரமும் குறைவாக இருக்கு. ம்ம்ம்ம்.. :))
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பின் கருணாகரமூர்த்தி,

உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.

நல்ல எழுத்து என்பதைப் பலரும் அவரவர் அளவுகோல்களை வைத்துப் பார்த்துக் கொள்வர். ஒருவரின் ரசனை, மற்றொருவரினின்றும் வேறுபட்டு இருப்பதில் வியப்பில்லை; தவறும் இல்லை தானே.

மற்றபடி, திஜா வின் படைப்புக்களை இந்தக் கோணத்தில் இருந்து ரசிப்பதில் நான் தனியில்லை என்பது மகிழ்ச்சியாயிருக்கிறது.

நீங்கள் கொடுத்த சுட்டிகளை இப்போது என்னால் பார்க்க/கேட்க முடியாது. பிறிதொரு சமயம் முயற்சிக்கிறேன்.

சுவாதித் திருநாள் ஒரு அருமையான திரைப்படம். இசை முக்கியத்துவம் உள்ளதாயினும், சுவாதித் திருநாள் என்ற கலைஞனை வேறொரு நிலையில் அறிந்து கொண்டது போல இருந்தது. அனந்த் நாக் அருமையாகச் செய்திருந்தார் - நினைவூட்டியதற்கு நன்றி.
Thangamani இவ்வாறு கூறியுள்ளார்…
எப்படி இந்தப் பதிவைத் தவறவிட்டேன்.

தி.ஜா என உயிருக்கு நெருக்கமான எழுத்தாளர். இந்த பத்திகளை நானும் இரசித்துள்ளேன். இசை அவரது எழுத்து. அதுவே இசையைப்பற்றி பேசும் போது களிகொள்ளும், உருகும், தீர்க்கமாய் நிலைக்கும், தவழும், முகிழ்களின் மேலெல்லாம் தாண்டி பறக்கும், ஆறாய் நகரும்.

எனக்கு பாரம்பரிய இசையறிவு கிடையாது. எனது இரசனையின் அளவுகளையும் அறியேன். ஆனால் இது எனக்கு தி.ஜாவையும் இசையையும் ரசிக்க தடையாய் இருக்கவில்லை. மோகமுள்தான் அவரது இசைபற்றிய அற்புதமான காட்சிகளைக் கொண்டிருந்தது என்பது என் கருத்து.

பதிவுக்கு மிக்க நன்றி
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
//எனக்கு பாரம்பரிய இசையறிவு கிடையாது. எனது இரசனையின் அளவுகளையும் அறியேன். ஆனால் இது எனக்கு தி.ஜாவையும் இசையையும் ரசிக்க தடையாய் இருக்கவில்லை//

:-)


தங்கமணி,

யாருக்குமே இது ஒரு தடையாக இருக்க முடியாது என்று தான் நினைக்கிறேன்.

இன்னும், நுட்பமான ரசனைகளை உடையவர்களைப் பார்த்தால் எனக்கு ஏனோ மகிழ்ச்சியாக இருக்கும். அந்த வகையிலும் ஒரு meta ரசிகனாக இவர் இசை எழுத்துக்களை ரசிப்பேன்.

நன்றி!
மாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
தி.ஜா.வே நன்றாக வீணை வாசிப்பார்.அவ்ர் வாசித்து நான் கேட்டிருக்கிறேன். அவர் ஏமனி யின் ரசிகர். எம்.டி.ராமநாதனின் அபிமானி.

அவருக்கு இலக்கியத்தை விட சங்கீதம் மனதுக்கு நெருக்கமானது.அவ்ருக்குள்ளேயே அது ஒரு இழையாக ஒடிக் கொண்டிருந்தது என்பது என் எண்ணம்.

சிதம்பர சுப்ரமணியத்தின் இதயநாதம் படித்திருக்கிறீர்களா?
மாலன்
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
நன்றி மாலன்.

//அவர் ஏமனி யின் ரசிகர். எம்.டி.ராமநாதனின் அபிமானி//

மோகமுள் கதையில் வரும் ஒரு காட்சி எம்.டி.ஆரின் வாழ்க்கைச் சம்பவம் என்று உயிர்மையில் சுகுமாரனும் எழுதியிருந்தார்.

//சிதம்பர சுப்ரமணியத்தின் இதயநாதம் படித்திருக்கிறீர்களா?//

இல்லை, ஆனால் படிக்கப் போகிறேன் :-)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்பில் நீர்ச்சறுக்க வேண்டுகிறேன் விரும்பினால் கரையிலே எழுதப்பட்டிர

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இந்த இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்குவதென்றால் க